தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

20.2.12

காரைக்கால் உயர்நிலைப்பள்ளிக்கு அப்துஸ் ஸமத் பெயர்-புதுவை முதல்வர் அறிவிப்பு!


காரைக்கால் பெண்கள் அரசினர் உயர்நிலைப் பள்ளிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மறைந்த தலைவர் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ் ஸமத் பெயர் சூட்டப்படும் என புதுவை மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.புதுவை மாநில வக்ஃபு வாரியம் சார்பில் காரைக்காலில் நடைபெற்ற மீலாதுந் நபி விழாவில் ஏ.எம்.எச்.நாஜிம் எம்.எல்.ஏ., விடுத்த கோரிக்கைக்கு பதிலளித்த முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இவ்விழாவிற்கு புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் எம்.சந்திரகாசு, காரை மாவட்ட வளர்ச்சி மற்றும் ஒருங்கிணைப் புக்குழு தலைவர் வி.எம்.சி.சிவக் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காரைக்கால் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.எச்.நாஜிம் தொடக்க

உரையாற்றினார். புதுச்சேரி மின்திறல் குழுமம் தலைவர் பி.ஆர்.சிவா வாழ்த்துரை வழங்கினார்.    காரைக்கால் ரீஜினல் காஜி மௌலவி என்.எஸ்.அப்துல் ஹமீது மரைக்காயர் தலைமை உரையாற்றினார், காரைக்கால் தூயமரியன்னை ஆலய பங்குத் தந்தை எஸ்.அல்போன்ஸ் அடிகளார், ஆன்மீக சொற்பொழிவாளர் வை.முருகைய ராஜேந்திரன் ஆகியோர் நபிகள் நாயகத்தின் உயர் பண்புகள் குறித்து உரையாற்றினார்கள். தொடர்ந்து மௌலானா கோவை ஏ.அப்துல் அஜீஸ் பாகவி விழா சிறப்புரையாற்றினார்.
இக் கூட்டத்தில் ஏ.எம்.எச். நாஜிம் எம்.எல்.ஏ. உரையாற்றுகையில், "சமுதாயப் பேரியக்கமாம் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாபெரும் தலைவராக திகழ்ந்து தேசிய மற்றும் திராவிட இயக்கத் தலைவர்களால் பெரிதும் மதிக்கப்பட்ட சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ் ஸமத் சாஹிப் புதுவை மாநி லத்தில் பிறந்து காரைக்கால் மஸ்தான் தெருவில் உள்ள பள்ளியில் 7-வது வகுப்பு வரை படித்தவர். எனவே, அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் காரைக்கால் அரசினர் பெண் கள் உயர்நிலைப் பள்ளிக்கு சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் பெயர் சூட்டப்பட வேண்டும் என முஸ்லிம் சமுதாயம் கோரிக்கை வைத்து வருகிறது.  அதேபோன்று காரைக் காலைச் சேர்ந்த மறைந்த எம்.ஓ.எச். பரூக் மரைக்காயர் புதுவை முதல்வராகவும், மத்திய அமைச்சராகவும், சவூதி அரேபிய நாட்டிற்கான இந்தியத் தூதராகவும், கேரள மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களின் ஆளுநராகவும் இருந்துள்ளார். அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் நுழைவு வாயில்களுக்குஅவர் பெயர் சூட்டப்பட வேண்டும்" என கோரிக்கை விடுத்தார்.

இக்கோரிக்கையை ஏற்றுக் கொண்ட முதல்வர் ரங்கசாமி "காரைக்கால் அரசினர் பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு சமுதாயத் தலைவர் அப்துஸ் ஸமத் பெயர் சூட்டப்படும்; காரைக்கால் நுழைவாயில்களுக்கு எம்.ஓ.எச். பரூக் மரைக்காயர் பெயர் சூட்டப்படும். இதற்காக மாநில அமைச்சரவையின் ஒப்புதல் பெற்று நடைபெற உள்ள புதுவை சட்டமன்றத்தில் முறைப்படியான அறிவிப்பு வெளியிடப்படும்" என உறுதியளித்தார்.
இக் கூட்டத்தில் உலமா பெருமக்களுக்கு ஓய்வூதியம், சைக்கிள்கள், முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை ஆகியவையும் வழங்கப்பட்டன.  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை  காரைக்கால் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சிராஜுல் மில்லத் பெயர் சூட்ட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை வைத்து வந்ததும், இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்: