தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

31.12.10

2010 இல் இந்தியா கண்ட முக்கிய நிகழ்வுகள்

ஜனவரி

4- ஆந்திராவை கலவர பூமியாக்கிவிட்ட தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவர் சந்திரசேகர ராவை நாடு கடத்த வேண்டும் என்று மறைந்த ஆந்திர முன்னாள் முதல் மந்திரி என்.டி.ராமராவி்ன் மனைவியும் என்.டி.ஆர். தெலுங்கு தேசம் கட்சியின் தலைவியுமான லட்சுமி பார்வதி கூறினார்.

6- கன்னட சூப்பர்ஸ்டார் விஷ்ணுவர்த்தன் மரணமடைந்தார்.

- சமாஜ்வாடிக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து அமர்சிங் விலகினார்.

7 - ஸ்ரீநகரில், ஒரு ஹோட்டலுக்குள் தீவிரவாதிகள் புகுந்து திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த 23 மணி நேர சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

- உடல் நிலை குன்றி கவலைக்கிடமான நிலையில் கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேற்கு வங்க முன்னாள் முதல்வரும், மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான ஜோதிபாசுவை பிரதமர் மன்மோகன் சிங் பார்த்தார்.

- ஜார்க்கண்ட் மாநில சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக கூட்டணி ஆட்சி வெற்றி பெற்றது.

9- சமாஜ்வாடிக் கட்சியிலிருந்து சஞ்சய் தத் விலகினார்.

12 - வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இந்திரா காந்தி அமைதி விருது வழங்கப்பட்டது.

17 - ஜோதிபாசுவின் உடல் கொல்கத்தா மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது.

18 - 44 நிகர் நிலைப் பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தை மத்திய அரசு ரத்து செய்தது.

20 தெலுங்கானாவில் வெடித்த கலவரத்திற்கு 10 மாவட்டங்கள் முடங்கிப் போயின.

23 - டெல்லியில் தேசிய சினிமா விருதுகள் அறிவிக்கப்பட்டன. பாலா சிறந்த இயக்குநராக அறிவிக்கப்பட்டார்.

25 - இசைஞானி இளையராஜா, இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது.

31 - மும்பையைச் சேர்ந்த ஹிரென் மோகினி என்பவர் நியூசிலாந்தில் சிலரால் குத்திக் கொல்லப்பட்டார்.

பிப்ரவரி

1 - விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மரணத்தை உறுதி செய்யும் ஆவணத்தை இலங்கை அரசு சிபிஐக்கு அனுப்பியுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

2- சமாஜ்வாடிக் கட்சியிலிருந்து அமர்சிங்கும், ஜெயப்பிரதாவும் இன்று நீக்கப்பட்டனர். இருவரையும் ஊடுறுவல்காரர்கள் என்று அக்கட்சி சாடியது. கட்சிப் பெயரை இருவரும் கெடுத்து விட்டதாகவும் சமாஜ்வாடிக் கட்சி கூறியது.

8- சிறுமி ருசிகா கற்பழிப்பு வழக்கில் சாதாரண அளவிலான தண்டனை பெற்ற மாஜி டிஜிபி ரத்தோரை, இன்று சண்டிகர் கோர்ட் வளாகத்தில் தேசிய வடிவமைப்புக் கழக முதுநிலை மாணவர் ஒருவர் சரமாரியாக குத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

9 - பாஜக தலைவராக நிதின் கத்காரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

12 - சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மை நேம் இஸ் கான் திரைப்படம் பெரும் பதட்டம், பரபரப்புக்கு மத்தியில் நாடு முழுவதும் திரையிடப்பட்டது.

13 - மகாராஷ்டிர மாநிலம் புனேவில் ஜெர்மன் பேக்கரியில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் 15 பேர் உயிரிழந்தனர்.

14- ஸ்ரீகிருஷ்ணா கமிட்டியின் வழிகாட்டி நெறிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தெலுங்கானாவைச் சேர்ந்த 15 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தனர்.

15 - மேற்கு வங்க மாநிலத்தில் ராணுவ முகாமில் மாவோயிஸ்ட் நக்சலைட்கள் நடத்திய தாக்குதலில் 20 வீரர்கள் உயிரிழந்தனர்.

23 - பெங்களூர் கார்ல்டன் டவர்ஸ் கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 3 பேர் மேலிருந்து கீழே குதித்து தப்ப முயன்றபோது உயிரிழந்தனர்.

மார்ச்

4 - உ.பி. மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி 71 பேர் உயிரிழந்தனர்.

8 - நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

9 - லோக்சபாவில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால் ராஜ்யசபாவில் எதிர்ப்பு காரணமாக நிறைவேற்றப்படவில்லை.

ஏப்ரல்

1 - நாடு முழுவதும் 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வி அளிக்கும் சட்டம் அமலுக்கு வந்தது.

6 - சட்டிஸ்கர் மாநிலம் தான்டேவாடாவில் சிஆர்பிஎப் படையினர் மீது மாவோயிஸ்ட் நக்சலைட்கள் நடத்திய தாக்குதலில் 76 வீரர்கள் உயிரிழந்தனர்.

14 - ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஏவும் முயற்சி தோல்வியில் முடிந்தது. ராக்கெட் திசை மாறி கடலில் போய் விழுந்தது.

17 - பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்திற்கு வெளியே நடந்த குண்டுவெடிப்பில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

18 - ஐபிஎல் கொச்சி அணி தொடர்பான சர்ச்சையில் சிக்கிய மத்திய வெளியுறவு இணை அமைச்சர் சசி தரூர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

23 - ரூ. 2 கோடி லஞ்சப் பணத்துடன் இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர் கேதன் தேசாய் கைது செய்யப்பட்டார்.

27 - பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக இந்திய தூதரக அதிகாரி மாதுரி கைது செய்யப்பட்டார்.

- பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு தழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை எதிர்க்கட்சிகள் நடத்தின.

- பாஜக கூட்டணியில் இருந்து கொண்டு மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களித்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மீது கோபம் கொண்ட பாஜக, ஜார்க்கண்ட் மாநில அரசுக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற்றது.

30 - ஆஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பில் தொடர்புடைய அபினவ் பாரத் என்ற இந்து தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த சந்திரசேகர் பரோட் என்பவர் கைது செய்யப்பட்டார்.

மே

2 - கர்நாடக அமைச்சர்கள் பலரும் சர்ச்சைகளில் சிக்கி வருவதால் முதல்வர் பதவியிலிருந்து எதியூரப்பா விலகக் கோரி அவரது வீட்டை முற்றுகையிட்ட இளைஞர் காங்கிரஸார் கல்வீசித் தாக்கி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

- ஐபிஎல் கொச்சி விவகாரத்தில் சிக்கி அமைச்சர் பதவியை இழந்த சசி தரூர், வெளியுறவுத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவில் உறுப்பினராக சேர்க்கப்பட்டார்.

3- மும்பைத் தீவிரவாத தாக்குதல் வழக்கில் கசாப் மீது சாட்டப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்பட்டதாக நீதிபதி தஹிளியானி அறிவித்தார். இணைக் குற்றவாளிகளான இந்தியர்களான பஹீம் அன்சாரி, சபாபுதீன் அகமது ஆகிய இருவரும் குற்றமற்றவர்கள் என கோர்ட் அறிவித்தது. மேலும், லஷ்கர் இ தொய்பா தலைவர் ஹபீஸ் சயீத், ஷகியூர் ரஹ்மான் லக்வி உள்பட 20 பேர் குற்றவாளிகள் எனவும் தீர்ப்பு தெரிவித்தது.

- நான்கு வருடங்களாக தனது செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டு வருவதாக மத்திய ரயில்வே அமைச்சரும், திரினமூல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி கூறினார்.

- நண்பரின் மனைவியை கற்பழிக்க முயன்ற கர்நாடக உணவுத்துறை அமைச்சர் ஹாலப்பா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

5- உண்மை கண்டறியும் சோதனை, மூளை வரைபட சோதனை, நார்கோ அனாலிசிஸ் போன்றவற்றை நடத்துவது சட்ட விரோதமானது என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது.

- கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் இணைந்தார்.

- ஐபிஎல் போட்டிகளுக்கு பொழுதுபோக்கு வரி விதிக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட பொது நல வழக்கில் மத்திய அமைச்சர் சரத் பவாரையும் பிரதிவாதியாக சேர்க்குமாறு பாம்பே உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது.

- மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கில், குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப் மீதான 86 குற்றச்சாட்டுகளில் 4 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவனுக்கு தூக்கு தண்டனையும், 5 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார் தனி நீதிபதி தஹிளியானி.

- சாமியார் நித்தியானந்தா தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு பெங்களூர் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.

- டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்ற மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம், மாவோயிஸ்ட் ஆதரவு மாணவி விபா என்பவர் ஆவேசமாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

7 - கிருஷ்ணா கோதாவரி படுகையில் எடுக்கப்படும் எரிவாயு தொடர்பாக முகேஷ், அனில் அம்பானிகள் இடையே ஏற்பட்ட மோதலில் முகேசுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 3 நீதிபதிகள் இடையே ஒத்த கருத்து ஏற்படாததால் 2:1 என்ற விகிதத்தில் முகேசுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டது.

8 - நீண்ட இழுபறிக்குப் பின்னர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆட்சி அமைக்க பாஜகவும், சிபு சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும் உடன்பாடு செய்து கொண்டன.

10 - குஜராத் கலவர வழக்கில் விஸ்வ இந்து பரிஷத் சர்வதேசத் தலைவர் பிரவீன் தொகாடியா இன்று சிறப்பு விசாரணைக் குழு முன் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

11 - வருமானத்தை மீறி சொத்துக் குவித்தது தொடர்பான வழக்கு விசாரணைக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வாபஸ் பெற்றார்.

12 - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.எச். கபாடியா பொறுப்பேற்றார்.

15 -முன்னாள் துணை குடியரசுத் தலைவர் பைரான் சிங் ஷெகாவத் மரணமடைந்தார்.

- ஊழல் புகார்கள் காரணமாக இந்திய மருத்துவக் கவுன்சில் கலைக்கப்பட்டது.

22 - மங்களூர் விமான நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர விமான விபத்தில் 158 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பல உடல்கள் அடையாளமே தெரியாத அளவுக்குக் கருகிப் போய் விட்டன. 8 பேர் உயிர் பிழைத்தனர்.

28 - மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்ட் நக்சலைட்கள் நடத்திய தாக்குதலில் இரு ரயில்கள் மோதி 148 பேர் பலியானார்கள்.

30 - பெங்களூர் வாழும் கலை அமைப்பின் ஆசிரமத்தில் திடீரென துப்பாக்கிச் சூடு நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் ஸ்ரீஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் காயமின்றித் தப்பினார்.

- ஜார்க்கண்ட் மாநில முதல்வர் பதவியிலிருந்து சிபு சோரன் விலகினார்.

ஜூன்

2 - மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தலில் மமதா பானர்ஜியின் திரினமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

7 - போபால் விஷ வாயு வழக்கில் யூனியன் கார்பைடு நிறுவன முன்னாள் தலைவர் ஆன்டர்சன் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். அவருக்கும் மேலும் 6 பேருக்கும் 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு பெரும் சர்ச்சைகளையும், நாட்டு மக்களிடையே கொதிப்பையும் உருவாக்கியது.

24 - பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட ஜஸ்வந்த் சிங் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டார்.

28 - இந்தியா, கனடா இடையே அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஜூலை

1 - திருப்பதி கோவிலுக்கு கிருஷ்ண தேவராயர் அன்பளிப்பாக வழங்கிய பல ஆயிரம் கோடி மதிப்புள்ள நகைகள் காணாமல் போனதாக பரபரப்பு ஏற்பட்டது.

3 - தெலுங்கானாவுக்கு எதிராக பேசுபவர்களின் தலையை வெட்டுவேன் என்று ஆவேசமாக பேசிய நடிகை விஜயசாந்தி கைது செய்யப்பட்டார்.

15 - ரூபாய்க்கான புதிய குறியீடு வெளியிடப்பட்டது. தமிழரான உதயக்குமார் இந்த குறியீட்டை வடிவமைத்திருந்தார்.

24 - சோராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கில் குஜராத் முன்னாள் அமைச்சர் அமீத் ஷா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

27 - புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக குரேஷி நியமிக்கப்பட்டார்.

- ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து நளினி, முருகன் உள்ளிட்ட நான்கு குற்றவாளிகளை விடுதலை செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.

- தெலுங்கானா பகுதியில் 12 சட்டசபைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 11 தொகுதிகளில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியும், ஒரு தொகுதியில் பாஜகவும் வெற்றி பெற்றன.

- இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேஹ்வால் கேல் ரத்னா விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆகஸ்ட்

6 - ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதியில் ஏற்பட்ட பெரும் மழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 180க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

10 - காஷ்மீருக்கு சுயாட்சி அந்தஸ்து வழங்குவது குறித்து பரிசீலிக்கத் தயாராக உள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார்.

11 - ஜாதி வாரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு மத்திய அரசு கொள்கை அடிப்படையில் ஒப்புதல் அளித்தது.

15 - ஸ்ரீநகரில் நடந்த சுதந்திர தின நிகழ்ச்சியின்போது முதல்வர் உமர் அப்துல்லா மீது ஷூ வீசப்பட்டது.

17 - கர்நாடக குண்டுவெடிப்பு சம்பவத்தில் கேரளாவின் அப்துல் நாசர் மதானி கொல்லத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.

செப்டம்பர்

2 - காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி 4வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

7 - ஊழல் வழக்கில் சிக்கிய பி.ஜே. தாமஸ் எப்படி ஊழல் கண்காணிப்பு ஆணையராக செயல்பட முடியும் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

- ரஷ்யாவில் நடந்த உலக மல்யுத்த சாம்பியன் போட்டியில், 66 கிலோ பிரிவில் இந்தியாவின் சுஷில்குமார் தங்கப் பதக்கம் வென்றார்.

11 - ஜார்க்கண்ட் மாநில முதல்வராக அர்ஜூன் முண்டா பதவியேற்றார்.

13 - காஷ்மீரில் வெடித்த கலவரத்தில் ஒரே நாளில் 15 பேர் உயிரிழந்தனர்.

- தமிழகத்தில் பந்த் நடத்த விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

- ஜார்க்கண்ட் சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக கூட்டணி அரசு வெற்றி பெற்றது.

- காஷ்மீருக்கு அனைத்துக் கட்சிக் குழுவை அனுப்பி வைக்க பிரதமர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

- தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. சிறந்த நடிகராக அமிதாப் பச்சன் அறிவிக்கப்பட்டார். பசங்க படம் 3 விருதுகளைப் பெற்றது. சிறந்த பின்னணி இசைக்கான விருது இசைஞானி இளையராஜாவுக்கு கிடைத்தது.

19 - டெல்லி ஜும்மா மசூதியில் 2 மர்ம நபர்கள் சரமாரியாக சுட்டதில் 2 பேர் காயமடைந்தனர்.

- மேற்கிந்தியத் தீவுகளில் நடந்த உலக குத்துச் சண்டைப் போட்டியில், இந்தியாவின் மேரி கோம் 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

20 - மத்தியப் பிரதேசத்தில் நின்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதியதில் 23 பேர் உயிரிழந்தனர்.

- காஷ்மீர் சென்னை அனைத்துக் கட்சிக் குழு, பிரிவினைவாத தலைவர்களை சந்தித்தது.

21 - காமன்வெல்த் போட்டிக்காக டெல்லி ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்திற்கு வெளியே கட்டப்பட்டு வந்த நடை மேம்பாலம் இடிந்து விழுந்தது.

- 2008ம் ஆண்டுக்குப் பின்னர் மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 20,000 புள்ளிகளைத் தாண்டியது.

23 - டெல்லி ஜவஹர்லால் நேரு ஸ்டேடிய வளாகத்தில் அமைந்த பளு தூக்கும் போட்டிக்கான அரங்கின் மேற்கூரை இடிந்து விழுந்தது.

- அயோத்திநில வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பை அளிக்க உச்சநீதிமன்றம் ஒரு வார கால தடை விதித்தது.

24 - ஆமிர்கான் நடித்த பீப்ளி லைவ் படம் ஆஸ்கர் விருதுப் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டது.

25 - காஷ்மீர் அமைதிக்காக 8 அம்சத் திட்டம் அறிவிக்கப்பட்டது.

26 - தென் ஆப்பிரிக்காவில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி 20-20 போட்டித் தொடரை சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றது. அந்த அணியின் முரளி விஜய்க்கு சிறந்த பேட்ஸ்மேனுக்கான தங்க பேட்டும், பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு சிறந்த பந்து வீச்சாளருக்கான தங்க பந்தும் பரிசாக கிடைத்தது.

29 - இந்திய மக்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் மகாராஷ்டிர மாநிலத்தில் தொடங்கி வைத்தார்.

30 - 60 ஆண்டுகால அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்று பங்காக பிரித்து இரு பங்கை இந்து அமைப்புகளுக்கும், ஒரு பங்கு முஸ்லீம் அமைப்புக்கும் வழங்க அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

- இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடத்தைப் பிடித்தார்.

அக்டோபர்

3 - பெரும் சர்ச்சைக்களுக்கு மத்தியில் டெல்லியில் காமன்வெல்த் போட்டிகள் தொடங்கின. தொடக்க விழாவைக் கண்டு உலகமே அதிசயித்தது.

5 - கர்நாடகத்தில் முதல்வர் எதியூரப்பாவுக்கு எதிராக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி உயர்த்தியதால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டது.

6 - அயோத்தி தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்வோம் என்று முஸ்லீம் சன்னி வக்பு வாரியம் அறிவித்தது.

- ஐசிசியின் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக சச்சின் டெண்டுல்கர் தேர்வு செய்யப்பட்டார். சிறந்த டெஸ்ட் வீரராக ஷேவாக் அறிவிக்கப்பட்டார்.

9 - ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராக 19 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தேர்வானது இந்தியா. பெரும் வாக்கு வித்தியாசத்தில் அது வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

11- கர்நாடக சட்டசபையில் கடும் அமளிக்கு மத்தியில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எதியூரப்பா அரசு வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார். இதை எதிர்க்கட்சிகள் நிராகரித்தன. கர்நாடக ஆட்சியைக் கலைக்கலாம் என்று கூறி சபாநாயகர் பரத்வாஜ் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பினார்.

12 - கர்நாடக சட்டசபையில் மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர ஆளுநர் உத்தரவிட்டார். அதை எதியூரப்பா ஏற்றார்.

14 - கர்நாடக சட்டசபையில் நடந்த 2வது நம்பிக்கை வாக்கெடுப்பில் எதியூரப்பா அரசு வெற்றி பெற்றது.

- டெல்லி காமன்வெல்த் போட்டிகள் நிறைவடைந்தன. இதில் இந்தியா 38 தங்கம், 27 வெள்ளி, 36 வெண்கலம் என மொத்தம் 101 பதக்கங்களைப் பெற்று 2வது இடத்தைப் பிடித்து புதிய சாதனை படைத்தது.

- டெஸ்ட் கிரிக்கெட்டில் 8 ஆண்டுகளுக்குப் பின்னர், பேட்டிங் தரவரிசையில் சச்சின் முதல் இடத்தைப் பிடித்தார்.

17 - காமன்வெல்த் போட்டி ஊழல்கள் குறித்த விசாரணையை வருமான வரி மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தொடங்கினர்.

18 - தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வகத்தை அமைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்தது.

19 - காமன்வெல்த் போட்டி ஊழல் தொடர்பாக நாடு முழுவதும் 30 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர்.

21 - பீகார் சட்டசபைக்கு முதல் கட்டமாக 47 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது.

22 - காமன்வெல்த் போட்டிகள் தொடர்பான கான்டிராக்டுகள் விடப்பட்ட விதம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

- தேசிய பாரம்பரிய விலங்காக யானை அறிவிக்கப்பட்டது.

25 - குதிரை பேரம் நடத்தி மாற்றுக் கட்சி எம்.எல்.ஏக்களை பாஜக தரப்பு விலைக்கு வாங்குவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து 3 அமைச்சர்கள், 4 பாஜக எம்.எல்.ஏக்களின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

26 - ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், பொட்டு அம்மான் ஆகியோரது பெயர்கள் நீக்கப்பட்டன.

27 - கேரள மாநில உள்ளாட்சித் தேர்தலில் இடதுசாரிக் கூட்டணிக்கு பெரும் தோல்வி கிடைத்தது.

29 - கர்நாடக பாஜக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 11 பேர் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

30 - மும்பை ஆதர்ஷ் சொசைட்டி ஊழலில் சிக்கிய முதல்வர் அசோக் சவான் சோனியா காந்தியை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

நவம்பர்

2 - ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருவதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டினார்.

- விடுதலைப் புலிகள் அமைப்புக்கு தடை நீடிக்கப்பட்டது சரியா என்பது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட டிரிப்யூனலின் தலைவர் நீதிபதி விக்ரம்ஜித் சென் தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

- தென் ஆப்பிரிக்க வேகப் பந்து வீச்சாளர் மக்காயா நிடினி, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

4 - மும்பை ஆதர்ஷ் சொசைட்டி வீட்டு ஊழல் குறித்து விசாரணை நடத்த பாதுகாப்புத்துறை உத்தரவிட்டது.

6 - 3 நாள் பயணமாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, தனது மனைவி மிஷலுடன் இந்தியா வந்தார்.

7 - பீகார் சட்டசபைத் தேர்தலில் நிதீஷ் குமார் தலைமையிலான கூட்டணி பெரும் வெற்றி பெற்றது.

- விக்கிலீக்ஸ் தனது முதல் பரபரப்பு அமெரிக்க ஆவணங்களை வெளியிட்ட நாள் இது.

9 - ஸ்பெக்ட்ரம் ஊழலைக் காரணம் காட்டி இன்று தொடங்கிய நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரை முடக்கின எதிர்க்கட்சிகள். கூட்டத் தொடரின் கடைசி நாளான டிசம்பர் 13ம் தேதி வரை நாடாளுமன்றம் சுத்தமாக இயங்கவில்லை.

10 - மகாராஷ்டிர மாநில புதிய முதல்வராக பிருத்விராஜ் சவான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

- 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் தொலைத் தொடர்பு அமைச்சர் ராஜா மற்றும் அமைச்சகத்தின் செயல்பாடுகள் காரணமாக நாட்டுக்கு ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி தனது அறிக்கையில் தெரிவித்தார். இந்தஅறிக்கை குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டது

ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் தோல்வி: விஞ்ஞானிகளிடையே மோதல்

சென்னை : அதிக எடை கொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் திட்டம் தோல்வியில் முடிந்ததற்கான காரணம் தொடர்பாக, இஸ்ரோவின் மூன்று பிரிவுகள் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்திய விண்வெளி ஆய்வு மையம்(இஸ்ரோ), கடந்த 25ம் தேதி ஜி.எஸ்.எல்.வி., - எப்06 ராக்கெட் மூலம் ஜிசாட் - 5பி தகவல் தொடர்பு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. பூமியிலிருந்து புறப்பட்ட சில வினாடிகளில், ராக்கெட் நடுவானில் வெடித்துச் சிதறியது. நிருபர்களுக்கு பேட்டியளித்த இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன், ""ராக்கெட்டில் உள்ள கம்ப்யூட்டரிலிருந்து ராக்கெட்டின் முதல் பகுதிக்கு கட்டளை சிக்னல்களை எடுத்துச் செல்லும் கேபிள் திடீரென அறுந்தது. இதனால், ராக்கெட்டிற்கு கட்டளைகளை அனுப்ப முடியவில்லை. கட்டுப்பாட்டை இழந்த ராக்கெட், நிர்ணயிக்கப்பட்ட பாதையிலிருந்து விலகிச் சென்றதால், ராக்கெட் வெடிக்க வைக்கப்பட்டது,'' என்றார். இஸ்ரோ வழக்கமாக வெளியிடும் பத்திரிகை செய்திக்குறிப்பில், தோல்வி குறித்து எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. "ஜி.எஸ்.எல்.வி., - எப்06/ஜிசாட் - 5பி திட்டம் வெற்றி பெறவில்லை' என, மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரோ செய்தித் தொடர்பாளர் கூறும்போது, ""என்ன நடந்தது, எப்போது நடந்தது என்பது எங்களுக்கு தெரியும். ஏன் நடந்தது என்பது குறித்து அனைத்து கோணங்களிலும் ஆய்வு செய்து வருகிறோம்,'' என்றார்.


ராக்கெட்டின் இரண்டாம் பகுதிக்கும், மூன்றாம் பகுதிக்கும் இடையேயான இணைப்பு துண்டிக்கப்பட்டதால், ராக்கெட் தோல்வியடைந்திருக்கலாம் என்ற கருத்தும் எழுந்துள்ளது. இதை மறுத்துள்ள இஸ்ரோ செய்தித் தொடர்பாளர், "ஓரிரு நாட்களில் தோல்விக்கான காரணத்தை இஸ்ரோ வெளியிடும்' என்றார். இத்திட்டத்தில் இணைந்து செயல்பட்ட இஸ்ரோவின் அங்கங்களான, பெங்களூரு இஸ்ரோ செயற்கைக்கோள் மையம்(ஐ.எஸ்.ஏ.சி.,), திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்(வி.எஸ்.எஸ்.சி.,), ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி மையம் (எஸ்.எச்.ஏ.ஆர்.,) ஆகிய மூன்று பிரிவினரும் தோல்விக்கு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர் என, கூறப்படுகிறது. செயற்கைக்கோளால் பிரச்னையா, ராக்கெட் வடிவமைப்பு, உற்பத்தியில் பிரச்னையா, ராக்கெட் ஒருங்கிணைப்பில் பிரச்னையா என, விவாதம் நடந்து வருகிறது. செயற்கைக்கோளை உருவாக்கிய ஐ.எஸ்.ஏ.சி.,யில் பிரச்னை ஏற்பட்டதா, ராக்கெட் வடிவமைக்கப்பட்டு, உற்பத்தி செய்யப்பட்ட வி.எஸ்.எஸ்.சி.,யில் பிரச்னை ஏற்பட்டதா, ராக்கெட் ஒருங்கிணைக்கப்பட்ட எஸ்.எச்.ஏ.ஆர்.,ல் பிரச்னை ஏற்பட்டதா என, விசாரணை நடந்து வருகிறது.


"விஞ்ஞானிகள் ஆரம்பம் முதலே நம்பிக்கையில்லாமல் இருந்தனர்' என, ஓய்வுபெற்ற இஸ்ரோ விஞ்ஞானி ஒருவர் தெரிவித்தார். அதிக எடை கொண்ட செயற்கைக்கோளை ஏவுவதற்கு ஏற்ற ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்டின் மூன்றாம் பகுதியின் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதற்கென ரஷ்ய விஞ்ஞானிகள் குழு வந்து, மூன்றாம் பகுதியின் திறனை அதிகரிப்பதில் உதவியுள்ளது. தோல்வியில் முடிந்த ஜிசாட் - 5பி செயற்கைக்கோள் தான், ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் இதுவரை எடுத்துச் சென்ற செயற்கைக்கோள்களில் எடை அதிகமானவை. ஜிசாட் - 5பி-யானது 2,310 கிலோ எடை கொண்டது. இது 2007ல் ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் மூலம் வெற்றிகரமாக ஏவப்பட்ட இன்சாட் - 4சி.ஆர்., செயற்கைக்கோளை விட 180 கிலோ, 2003ல் ஏவப்பட்ட எஜுசாட் செயற்கைக்கோளை விட 400 கிலோ, 2001ல் ஏவப்பட்ட ஜிசாட் - 1 செயற்கைக்கோளை விட 800 கிலோ அதிக எடை கொண்டது. அதிக எடையின் காரணமாக ஏற்பட்ட நிலையற்ற தன்மையே, ராக்கெட்டின் தோல்விக்கு காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. "கேபிள் இணைப்புகள் அவ்வளவு எளிதாக அறுந்துபோகாது. கேபிள் இணைப்புகள் அந்த அளவிற்கு திடமாக பொருத்தப்பட்டிருக்கும். ராக்கெட்டே உடைந்தால் மட்டுமே கேபிள் இணைப்புகள் அறுபடும்' என, விஞ்ஞானி ஒருவர் தெரிவித்தார். சோதனை மற்றும் மறுசோதனை மூலமாக மட்டுமே எதிர்காலத்தில் தோல்விகளை தவிர்க்க முடியும் என மற்றொரு விஞ்ஞானி தெரிவித்தார்

குவைத் ராணுவ வீரர்கள் தாடி வளர்க்க அனுமதி

துபாய், டிச.30: குவைத் நாட்டின் ராணுவ வீரர்கள் தாடி வளர்க்கலாம் என அந்நாட்டு நாடாளுமன்றம் புதிய சட்டம் நிறைவேற்றியுள்ளது. குவைத் நாட்டின் ராணுவத்தில் ஆண்கள் தாடி வைப்பது தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால் புதன்கிழமை நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் ராணுவ வீரர்கள் தாடி வளர்ப்பது மீதான தடையை நீக்கித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

கடந்த ஜூன் மாதம் தாடி வளர்க்க அனுமதிக்கும் நகல் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அப்போதிருந்தே இதற்குப் பரவலான ஆதரவு இருந்தது தெரிய வந்தது. எனினும் அடுத்த 30 நாள்களில் இந்தத் தீர்மானத்தை அரசு நிராகரிக்கவும் குவைத் நாட்டு சட்டத்தில் இடமிருக்கிறது.

குவைத் வரலாற்றில் அதன் நாடாளுமன்றத்துக்கு முதல்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு உறுப்பினர்களில் மூன்று பெண் உறுப்பினர்கள் இந்த தாடி மசோதாவை ஆதரித்து வாக்களித்தார்கள். நான்காவது உறுப்பினர், நாடாளுமன்ற சபாநாயகர் ஆகியோர் இதற்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை என்பது குறிப்படத்தக்கது