தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

29.11.10

விக்கிலீக்ஸ் - ஆடும் அமெரிக்கா அதிர்வில் உலகம்

அமெரிக்காவின் ரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணைய தளம் வெளியிட்டதன் மூலம் அந்த நாடு தற்போது அரசியல் நெருக்கடியில் சிக்கி இருக்கிறது. ஏறத்தாழ 250000 ரகசிய ஆவணங்கள் பிரபல பத்திரிகைகளான கார்டியன், நியுயார்க் டைம்ஸ் ஆகியவற்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பிடப்பட்டுள்ள சில முக்கிய தகவல்கள் வருமாறு:

அரபு நாடுகளின் தலைவர்கள் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்காவைத் தூண்டியது.

ஐநா தலைவர்களை உளவு பார்ப்பதற்காக அமெரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி இருப்பதால் அங்குள்ள அரசு அதிகாரிகள் பணத்துக்காக அணு ஆயுதங்கள் தயாரிக்கத் தேவையான பொருட்களை தீவிரவாதிகளுக்கு பணத்துக்காக விற்கலாம் என அதிகாரிகள் எச்சரித்ததால் பாகிஸ்தானின் அணு ஆயுதம் சம்பந்தமாக அமெரிக்காவும் இங்கிலாந்தும் கொண்டிருந்த கவலை.

ஆப்கான் துணை ஜனாதிபதி ஜியா மசூத் 52 மில்லியன் டாலர் பணத்தை ஐக்கிய அரபு அமீரகம் செல்லும்போது கையோடு எடுத்துச் சென்றது.

சீனாவில் இருந்து கூகுள் வெளியேறப் பிண்ணனியிலிருந்து செயல்பட்டவர் பொலிட்பீரோவைச் சார்ந்த ஒரு உறுப்பினர் என்ற தகவல்.

மாபியாக்களுடன் சேர்ந்து ரஷ்ய உளவு அதிகாரிகள் குற்றச் செயல்களில் ஈடுபட்டது, ரஷ்யாவை ஒரு மாபியா நாடு என வர்ணித்திருப்பது.

ஆப்கானிஸ்தானில் ஐக்கிய ராஜ்ஜியத்தின் ராணுவ நடவடிக்கைகளை அமெரிக்க ராணுவ அதிகாரிகள் மற்றும் ஆப்கான் அதிபர் கர்ஷாய் கடுமையாக விமர்சனம் செய்திருப்பது.

உலகம் முழுவதிலுமுள்ள அமெரிக்க தூதரகங்களில் நிறைந்திருக்கும் ஊழல்கள் மற்றும் அங்கு வேலை செய்யும் அதிகாரிகள் நாடுகளின் தலைவர்களை கேவலமாகப் பேசியிருப்பது. குறிப்பாக கர்ஷாயியை மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் புடினை நாய் என்றும் தெரிவித்திருப்பது.

அல்காய்தாவுக்கு பொருளாதார உதவிகள் செய்வதில் முன் நிற்பவர்கள் சவுதி அரேபியாவைச் சார்ந்தவர்கள்.

எமனில் அமெரிக்க விமானங்கள் அல்காய்தா முகாம்களின் மீது தாக்குதல் நடத்துவதை வெளியுலகிற்கு தெரியாமல் மறைப்பது. தாங்கள்தான் தாக்குதல் நடத்துவதாக தொடர்ந்து உலகிற்கு சொல்லிக் கொண்டிருப்போம் என எமன் அதிபர் அப்துல்லா ஸாலே ஜனவரி 2010ல் அன்றைய மத்திய கிழக்கின் அமெரிக்க கமாண்டராக இருந்த டேவிட் பெட்ரேஸிடம் கூறியது.

இவ்வாறான தகவல்களை விக்கிலீக்ஸ் வெளியிடப்போவதை அறிந்த அமெரிக்கா இதனைத் தடுப்பதற்கு செய்த முயற்சிகள் ஏதும் பலனளிக்கவில்லை. ஜெர்மனி, சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகள், ஆப்கானிஸ்தான் போன்ற அரசாங்கங்களுக்கு அந்தந்த நாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதர்கள் மூலம் இந்த தகவல்கள் வெளியாவதை தெரிவிக்கும்படி கட்டளையிடப்பட்டனர். இவ்வாறு ரகசியத் தகவல்கள் வெளியானதால் இனி அமெரிக்காவுடன் தகவல் பரிமாற்றம் வைத்துக் கொள்வதைப் பல நாடுகள் தவிர்த்துக் கொள்ளலாம் என கருதப்படுகிறது.

ரகசியத் தகவல்களை வெளியிட்ட விக்கிலீக்ஸ் இணையதளத்துக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இவ்வாறான தகவல்களை வெளியிட்டதன் மூலம் மனித உரிமைகளை மீறியதோடு பல தனி நபர்களின் உயிருக்கும் விக்கிலீக்ஸ் உலை வைத்துள்ளதாக வெள்ளை மாளிகை குற்றம் சாட்டியுள்ளது.

இங்கிலாந்து வெளியுறவுத்துறையைச் சார்ந்த ஒரு அதிகாரி கூறும்போது இவ்வாறான ரகசிய ஆவணங்களை வெளியிட்டதை வன்மையாக கண்டிக்கிறோம் என தெரிவித்ததோடு அமெரிக்காவுடனான நட்புறவு தொடரும் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் மெயர் என்ற அமெரிக்காவுக்கான முன்னாள் இங்கிலாந்து தூதர் தெரிவிக்கும்போது இனிமேல் மின்னியல் கருத்துப் பரிமாற்றங்களின் பாதுகாப்பு பற்றி மக்கள் யோசிப்பார்கள். முன்பைப்போல் காகிதத்தில் பரிமாற்றங்கள் செய்திருந்தால் இவ்வாறாக அதிக அளவில் ஆவணங்களை திருடியிருக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

இதனை வெளியிட்டதன் மூலம் விக்கிலீக்ஸின் உரிமையாளர் ஜீலியன் அஸான்ஜ் மீது அமெரிக்க அரசு வழக்குத் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆவணங்கள் மூலம் அமெரிக்க தூதரகங்களை தனது சதித்திட்டங்களுக்கு அமெரிக்க அரசு எந்தளவு பயன்படுத்தியுள்ளது என்ற விபரங்கள் வெளிவந்துள்ளன. தாங்கள் சந்திக்கும் நபர்களின் கடன் அட்டை விபரங்கள், அவர்களின் மரபணுக்கள் உள்ளிட்ட பல தகவல்களை அமெரிக்க தூதரக அதிகாரிகள் சேகரித்துள்ளனர்.

ஐநா தலைவரை உளவு பார்த்ததும் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஐநாவின் உயர் அதிகாரிகள் பயன்படுத்தும் கணிணியைப் பற்றிய முழு தகவல்களையும் பெற்றுத் தர அதிகாரிகள் பணிக்கப்பட்டுள்ளனர். இது சம்பந்தமாக தெரிவித்த பான்கீ மூனின் சார்பில் பேசவல்ல அதிகாரி பர்ஹான் ஹக் பான்கீமூன் இது சம்பந்தமாக தற்போது எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை எனக்
குறிப்பிட்டார்.

உலகின் மிக உயரமான அடுக்கு மாடி குடியிருப்பு துபாயில்

துபாய் : ஏற்கனவே 823 மீட்டர் உயரமுள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான பர்ஜ் கலீபா அமைந்துள்ள துபாய் நகரத்தில் 107 மாடிகளை கொண்ட உலகின் மிக உயரமான அடுக்குமாடி குடியிருப்பு அடுத்த ஆண்டுக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

துபாயில் அடுக்கு மாடி குடியிருப்புகள் நிறைந்த துபாய் மெரீனா பகுதியில் அமையவுள்ள பிரின்ஸஸ் டவர் என பெயரிடப்பட்டுள்ள இக்கட்டிடம் 414 மீட்டர் உயரம் கொண்டது என்றும் இதன் கட்டுமான பணிகள் 2011 ஆம் ஆண்டு இறுதிக்குள் கட்டி முடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயரமான கட்டிடங்களின் அமைப்பு குழுவின் படி 78 மாடிகளுடன் 323 மீட்டர் உயரமுள்ள ஆஸ்திரேலியாவில் உள்ள 1 கட்டிடமே தற்போது உலகின் மிக உயரமான அடுக்குமாடி குடியிருப்பாக உள்ளது. ப்ரின்ஸஸ் டவருடன் 91 மாடிகள் கொண்ட எலைட் குடியிருப்பும் 2011க்குள் கட்டி முடிக்கப்படும் என தமீர் ஹோல்டிங் தலைவர் பெட்ரிக்கோ தைபர் கூறினார்.

பொருளாதார நெருக்கடிக்கு முன்பிருந்த விலையுடன் ஒப்பிடுகையில் 50 சதவிகிதம் வரை குறைந்த விலைக்கு கட்டிடங்கள் விற்கப்படுவதாகவும் முதலீட்டாளர்கள் இவ்வாய்ப்பை தவற விட கூடாது என்றும் பெட்ரிக்கோ கூறினார். சீனா, நைஜீரியா, ரஷ்யா உள்ளிட்ட வெளிநாட்டு முதலீட்டாளர்களை கவரும் வகையில் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

”விஞ்ஞானி கொலைக்கு இஸ்ரேல்,அமெரிக்கா காரணம்”

இன்று ஈரானின் தலைநகர் பாக்தாத்தில் ஏற்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் ஈரானின் விஞ்ஞானி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் அணுசக்தி விஞ்ஞானி ஆவார். இந்தத் தாக்குதலின் பின்னணியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இருப்பதாக ஈரானிய உயர் அதிகாரிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.