தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

30.10.10

பிரான்ஸூக்கு எச்சரிக்கை - ஒஸாமா

பிரான்ஸை எச்சரித்து ஒஸாமா பின் லேடன் உரையாற்றிய ஒலிநாடாவை அல் ஜஸீரா வெளியிட்டுள்ளது. இதில் கடந்த மாதம் நைஜர் நாட்டில் ஐந்து பிரான்ஸ் நாட்டவரை கடத்திச் சென்றது பிரான்ஸ் முஸ்லிம்களுக்கெதிரான செயல்படுத்திவரும்அநீதிகளுக்கான எதிர்வினை என ஒஸாமா குறிப்பிட்டுள்ளார்.
எனது மக்கள் பசியால் வாடும்போது நீங்கள் எங்களது நிலங்களை மறைமுகமான பேரங்கள் மூலம் அபகரிப்பது எந்த விதத்தில் நியாயமானது என அந்த ஒலிநாடாவில் கேள்வி எழுப்பியுள்ளார். குறிப்பாக வட மற்றும் மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள முஸ்லிம் நாடுகளை குறிப்பிட்டு ஒஸாமா பேசியுள்ளார். முஸ்லிம் நாடுகளில் நீங்கள் நடத்தி வரும் அநீதிகளின் எதிர்வினைதான் நைஜரில் நடத்தப்பட்ட கடத்தல் சம்பவம் என ஒலி நாடாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செப்டம்பரில் நைஜரில் வேலை பார்த்து வந்த ஐந்து பிரான்ஸ் நாட்டவர் கடத்தப்பட்டதற்கு அல் காய்தாவின் வட ஆப்ரிக்கா பிரிவு பொறுப்பேற்றுள்ளது. இவர்களின் புகைப்படங்களையும் அல்காய்தா கடந்த மாதம் வெளியிட்டது. கடத்தல் சம்பவத்திற்கு பிறகு அல்காய்தா எந்த விதமான கோரிக்கைகளையும் தங்களுக்கு வைக்கவில்லை என பிரான்ஸ் அரசின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஒலிநாடாவில் பர்தாவை தடை செய்ய முன்வந்திருக்கும் பிரான்ஸின் செயலும் விமர்சிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் முஸ்லிம் பெண்களின் பர்தாவை நியாயமின்றி தடை செய்வது உங்களின் உரிமை என நினைக்கும்போது , எங்கள் நாடுகளை ஆக்கிரமித்துள்ள உங்களை வெளியேற்றுவது மற்றும் கொலை செய்வது எங்களின் உரிமை அல்லவா என தெரிவித்துள்ள ஒஸாமா ஆப்கானிஸ்தானிலிருந்து பிரான்ஸ் படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். அவ்வாறு வெளியேறாவிட்டால் கடத்தல் சம்பவங்கள் தொடரும் என எச்சரித்துள்ளார். எங்களின் நிலைப்பாடு தெளிவானது - நீங்கள் கொன்றால் நாங்களும் கொல்வோம் , நீங்கள் மக்களை பிணைக்கைதிகளாக்கும்போது நாங்களும் அவ்வாறு செய்வோம் என அந்த ஒலிநாடாவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருந்ததி ராயை நாடு கடத்த வேண்டும்! பாஜக

தேச ஒற்றுமைக்கு எதிராக பேசிய அருந்ததி ராயை நாடு கடத்த வேண்டும் என போபாலில் மத்தியபிரதேச பா.ஜ. தலைவர் பிரபாத்ஜா ப.சிதம்பரத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். விடுதலை ஒன்றே குறிக்கோள் என்ற தலைப்பில் கடந்த வாரம் டெல்லியில் காஷ்மீர் பிரிவினைவாதிகள், மாவோ ஆதரவாளர்கள் மற்றும் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் பஙகேற்ற மாநாடு நடைபெற்றது. இதில் பேசிய பிரபல ஆங்கில எழுத்தாளர் அருந்ததி ராய், ‘காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி இல்லை’ என்றார். மேலும் இந்திய அரசுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார்.

இதையடுத்து அவரை தேச விரோத வழக்கில் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அருந்ததிராய் சர்வதேச அளவில் புகழ் பெற்ற எழுத்தாளர் என்பதால் அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வரும் சமயத்தில் புதிதாக ஒரு சர்வதேச பிரச்னையை உருவாக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் மத்திய அரசு இந்தக் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை.

இந்நிலையில் அருந்ததிராயை நாடு கடத்த வேண்டும் என மத்தியபிரதேச பாஜ மாநில தலைவர் பிரபாத் ஜா, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். தனது கடிதத்தில், ‘அருந்ததிராயை நாடு கடத்தவதுடன் அவருக்கு வழங்கப்பட்ட விருதுகள் மற்றும் கவுரவங்களை வாபஸ் பெற வேண்டும்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தேச விரோத பேச்சுக்கும், பேச்சு சுதந்திரத்துக்கும் உள்ள வித்தியாசத்தை ப.சிதம்பரம் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கடிதத்தில் பிரபாத் ஜா குறிப்பிட்டுள்ளார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட கையெழுத்திடவில்லை - திமுக எம்.பி.ஹெலன் டேவிடசன் விளக்கம் !

அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டும் கோரிக்கை மனுவில் தான் கையெழுத்திடவில்லை என்று எம்.பி.ஹெலன் டேவிட்சன் விளக்கம் அளித்துள்ளார்.

அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குள்ளான நிலத்தில் மூன்றில் இரண்டு பகுதியை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. சர்ச்சைக்குரிய இடமாக ஆக்கப்பட்ட பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்துத்துவா அமைப்பான வி.ஹெச்.பி. இந்தியா முழுவதும் கையெழுத்து இயக்கம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், கமிட்டி நிர்வாகிகள் கன்னியாகுமரி தி.மு.க.வை சேர்ந்த எம்.பி. ஹெலன் டேவிட்சனை அணுகி ராமர் கோவில் கட்டுவது தொடர்பான விவரங்களை எடுத்துக்கூறி கையெழுத்து இயக்கத்தின் மனுவில் கையெழுத்து போடுமாறு கேட்டுக்கொண்டதாகவும், அவரும் உடனடியாக கையெழுத்து போட்டுக் கொடுத்ததாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. இது குறித்து எம்.பி. ஹெலன் டேவிட்சனுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தி.மு.க. தலைமைக் கழகம் தெரிவித்திருந்த்தது.

இந்த சர்ச்சை குறித்து எம்.பி. ஹெலன் டேவிட்சன் விளக்கமளித்துள்ளார். மக்களவை உறுப்பினர் அலுவலகத்தில் பலர் வந்து என்னிடம் மனு அளிக்கிறார்கள். அதுபோலவே ஸ்ரீஅனுமன் சக்தி ஜாகரன் சமிதி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. வேலாயுதன் தலைமையில் ஒரு குழுவினர் வந்து மனு அளித்தனர். அந்த மனுவை பெற்றுக்கொண்டதை உறுதி செய்யும் வகையில்தான் கையெழுத்திட்டிருந்தேன். ஆனால், அதை சிலர் திரித்துச் செய்தி வெளியிட்டுள்ளனர். ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவு தெரிவித்து நான் கையெழுத்திடவில்லை. திமுக தலைமைக் கழகம் அனுப்பியுள்ள நோட்டீஸ் கிடைக்கப் பெற்றேன். இது குறித்து அக்டோபர் 27ம் தேதி புதன்கிழமையன்று திமுக தலைமைக் கழகத்திற்கு விரிவான விளக்கம் அனுப்பவுள்ளேன் என்று ஹெலன் டேவிட்சன் கூறினார்.

எம்.பி. ஹெலன் டேவிட்சன் கூறியுள்ள விளக்கத்தின் மூலம் இந்த சர்ச்சை முடிவுக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

துபாயில் நேச்சர் 2010: சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

துபாய்: துபாய் நகராட்சி சார்பில் ‘நேச்சர் 2010’ எனும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று காலை அல் ஜடாஃப் பகுதியில் நடைபெற்றது.

துபாய் முனிசிபாலிட்டி கடந்த 1994-ம் ஆண்டு முதல் வருடந்தோறும் சுற்றுச்சுழல் விழிப்புணர்வு நிகழ்வினை நடத்தி வருகிறது. இதன் மூலம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

இந்நிகழ்வில் ஈடிஏ நிறுவன ஊழியர்கள், தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநில அமைப்புகள் பங்கேற்றன.

இந்த நிகழ்ச்சிக்கு ஈடிஏ ஜீனத் நிறுவனம், யூனியன் பேப்பர் மில், டல்ஸ்கோ, அல்பா எமிரேட்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் அனுசரணை வழங்கியிருந்தன