தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.10.10

ராமர் பிறந்த இடம் அயோத்தி என தீர்ப்பளித்த நீதிபதி சர்மாவுக்கு பாராட்டு விழா: ராமஜென்மபூமி அறக்கட்டளை முடிவு

அயோத்தி,அக்.5:அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்று தீர்ப்பில் குறிப்பிட்ட நீதிபதி சர்மாவுக்கு பாராட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

அயோத்தியில் ராமஜென்மபூமி நிலம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பாக மூன்று தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர். இதில் ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளையும் ஒன்றாகும். அறக்கட்டளையின் சாதுக்களும், சன்யாசிகளும் இணைந்து இந்த பாராட்டு விழாவை நடத்த முடிவு செய்துள்ளதாக அறக்கட்டளையின் உறுப்பினர் ராம் விலாஸ் வேதாந்தி தெரிவித்தார்.

ராமஜென்ம பூமி வழக்கில் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியதைப் பாராட்டும் வகையில் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக செய்தியாளர்களிடம் வேதாந்தி தெரிவித்தார். இது தொடர்பாக நீதிபதி சர்மாவுடன் பேசி, பாராட்டு விழாவுக்கான தேதி இறுதி செய்யப்படும் என்றார்.
பணியிலிருந்து ஓய்வு பெற்றதால் இவருக்கு முதலில் பாராட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மற்ற இரண்டு நீதிபதிகளான எஸ்.யு. கான் மற்றும் சுதிர் அகர்வால் ஆகியோர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்குப் பாராட்டு விழா நடத்தப்படும் என்று வேதாந்தி தெரிவித்தார்.

'நான் நடத்திய ரதயாத்திரையை நியாயப்படுத்துகிறது அயோத்தியா தீர்ப்பு' - எல்.கே.அத்வானி

புதுடெல்லி,அக்.5:பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்ச் அளித்துள்ள தீர்ப்பு தான் நடத்திய ரதயாத்திரையை நியாயப்படுத்துவதாக பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவரான எல்.கே.அத்வானி கூறியுள்ளார்நீதிமன்ற உத்தரவின் பின்னணியில் தற்காலிக கோயில் அமைந்துள்ள இடத்தில் ராமர்கோயில் கட்டுவதற்கான ஆரம்பக்கட்ட வேலைகளை தான் நடத்தப்போவதாக அத்வானி தெரிவிக்கிறார்.

1989 ஆம் ஆண்டு அயோத்தியில் ராமர்கோயிலை கட்டவேண்டுமெனக் கோரி அத்வானி ரதயாத்திரையை நடத்தினார்.

அத்வானியின் ரத யாத்திரை நாடு முழுவதும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டி ரத்தயாத்திரையாக மாறியது.

லக்னோ பெஞ்சின் தீர்ப்பு சட்டங்களைவிட நம்பிக்கையை உயர்த்திப்பிடிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்தார் அத்வானி. தீர்ப்பின் மூலம் சட்டம் நம்பிக்கையை உயர்த்திப் பிடிப்பதாக அத்வானி கூறினார்.

ஃபைஸாபாத்தில் சரயூ நதியின் கரையில் காம்ப்ளக்ஸிற்கு வெளியே முஸ்லிம்களுக்கு மஸ்ஜித் கட்டலாம் என பா.ஜ.கவின் தலைவர் நிதின்கட்காரி பி.டி.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியிருந்தார். இதனை அத்வானியும் ஆதரித்துள்ளார்.

செய்தி:மாத்யமம்