தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

15.10.10

காமன்வெல்த் போட்டி சிறப்பாக நடந்துமுடிந்துள்ளது

டெல்லி: பல்வேறு சர்ச்சைகள், சந்தேகங்கள் எழுந்தாலும் கடைசியில் காமன்வெல்த் போட்டியை டெல்லி சிறப்பாகவும், சீரிய முறையிலும் நடத்தி முடித்துள்ளது பாராட்டுக்குரியது என்று பாராட்டியுள்ளார் காமன்வெல்த் போட்டி அமைப்பின் தலைவர் மைக்கேல் பென்னல்.

கேம்ஸ் வில்லேஜ் சரியில்லை, அங்குள்ள கக்கூஸ் சரியில்லை, பாம்பு ஓடுகிறது, தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது, அழுக்காக இருக்கிறது என்றெல்லாம் கூறி ஒரேயடியாக புகார்களாகக் கூறிவந்தனர் பென்னல் உள்ளிட்ட பலர். அத்தோடு பாதுகாப்பு சரியில்லை என்று காரணம் கூறி பல முன்னணி அணிகள் போட்டியில் கலந்து கொள்வதா, வேண்டாமா என்பது குறித்து யோசித்து வருகிறோம் என்று கூறி டபாய்த்தன.

ஆனால் போட்டியின் தொடக்க விழாவைப் பார்த்து அத்தனை பேரும் அசந்து போய் விட்டனர். அதேசமயம், கேம்ஸ் வில்லேஜில் செய்யப்பட்டிருந்த வசதிகள் உள்ளிட்ட அனைத்தும் வெளிநாட்டுக்காரர்களை மூக்கின் மீது விரலை வைக்கும் அளவுக்கு ஆச்சரியப்படுத்தியது. இப்போது போட்டியும் வெற்றிகரமாக முடிந்து விட்டது.

இந்தநிலையில் நேற்று கடைசி முறையாக செய்தியாளர்களைச் சந்தித்த பென்னல் டெல்லியை வெகுவாகப் பாராட்டினார். அவர் கூறுகையில், மிகவும் திறம்பட செயலாற்றியுள்ளது டெல்லி. ஒட்டுமொத்த போட்டியையும் சிறப்பாக நடத்தி முடித்துள்ளது. இது மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. டெல்லியின் இந்த திறமை பாராட்டுக்குரியது.

போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பு இந்தியாவுக்குப் போவதா, வேண்டாமா என்ற எண்ணத்தில் பலர் இருந்தனர். ஆனால் அத்தனை அவதூறுகளையும் டெல்லி நிர்வாகம் அப்படியே அப்புறப்படுத்தி விட்டது, சிறப்பான போட்டியாக இதை மாற்றி விட்டது.

நான் செப்டம்பர் 23ம் தேதி டெல்லிக்கு புறப்பட்டபோது பலரும் என்னிடம் போட்டியை ரத்து செய்யும் அறிவிப்பை வெளியிடப் போகிறீர்களா என்று கூட கேட்டனர். அந்தஅளவுக்கு பிரச்சினைகள் அப்போது இருந்தன.

ஆனால் அதற்கு அவசியமே இல்லாத வகையில் சிறப்பான முறையில் டெல்லி நிர்வாகம் ஏற்பாடுகளை முடுக்கி விட்டு போட்டியையும் சிறப்பாக முடித்துள்ளது என்றார் பென்னல்.

ஈரான் அதிபர் நஜாதிற்கு லெபனானில் உற்சாக வரவேற்பு

பெய்ரூத்,அக்.14:ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மதி நஜாத் லெபனானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்நாட்டில் நஜாதிற்கு உற்சாக வரவேற்பை அளித்தனர் லெபனான் மக்கள்.

முதன்முதலாக லெபனானுக்கு செல்லும் நஜாதை வரவேற்க விமான நிலையம் முதல் அதிபரின் மாளிகை வரை வழியோரங்களில் நூற்றுக்கணக்கான லெபனான் மக்கள் கூடியிருந்தனர். அதிபர் மாளிகைவரை திறந்த ஜீப்பில் சென்ற நஜாதை மக்கள் பூச்செண்டுக் கொடுத்து வரவேற்றனர்.

இந்த சுற்றுப்பயணத்தின் போது லெபனான் அதிபர் மைக்கேல் சுலைமான், பிரதமர் ஸஅத் ஹரீரி ஆகியோரை நஜாத் சந்தித்து பேசுவார். அதேவேளையில்,ஹிஸ்புல்லாஹ் தலைவர் ஹஸன் நஸ்ருல்லாஹ்வுடனான சந்திப்பைத்தான் உலகம் உற்று நோக்குகிறது.

இஸ்ரேலுக்கு சிம்மசொப்பனமாக விளங்கும் ஹிஸ்புல்லாஹ் மேற்கத்திய நாடுகளின் கண்களில் விரலை விட்டு ஆட்டி வருகிறது.

2006 ஆம் ஆண்டு இஸ்ரேலுடன் நடந்த போரில் ஹிஸ்புல்லாஹ்வுக்குத்தான் வெற்றிக்கிடைத்தது. இஸ்ரேலின் தாக்குதலால் தகர்க்கப்பட்ட பின்த் ஜுபைல், கன ஆகிய இடங்களுக்கும் நஜாத் செல்கிறார். ஹிஸ்புல்லாஹ் வலுவான நகரங்கள் இவை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளையில், நஜாதின் வருகையில் மேற்கத்திய ஆதரவாளர்களான பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்ப்புள்ளதாக பத்திரிகைகள் கூறுகின்றன.

லெபனான் அதிபருடனான உரையாடலின் போது அமெரிக்க அரசு நஜாதின் வருகைக் குறித்து கவலைத் தெரிவித்திருந்தது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்,www.tehrantimes.com