தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

24.11.10

யுஏஇ இந்தியர்களுக்கு 24 மணி நேர போன் உதவி சேவை: பிரதீபா பாட்டீல் துவக்கம்

அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்தில் பணி புரியும் இந்தியர்கள் துன்பத்தில் இருந்து விடுபெற 24 மணி நேர தொலைபேசி சேவை மற்றும் ஆலோசனை சேவையை நேற்று குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் துவங்கி வைத்தார்.

இந்திய தொழிலாளிகள் மையத்தை பிரதீபா பாட்டீல் திறந்து வைத்தார். இந்த மையம் தொழிலாளிகளின் குறைகளைத் தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கும். ஐக்கிய அரபு அமீரகத்தில் 1. 75 மில்லியன் இந்தியர்கள் பணி புரிகின்றனர்.

பிரதீபா பாட்டீல் அரபு நாடுகளில் 5 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இது போன்ற மையங்களை வளைகுடா நாடுகளிலும் துவங்கத் திட்டமிட்டிருப்பதாக வெளிநாட்டு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி தெரிவித்தார்.

இவை வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு பொருளாதாரம், சட்டம், மனோதத்துவம் குறித்து ஆலோசனையும், உதவியும் அளிக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இந்திய தூதர் எம். கே. லோகேஷ் இங்குள்ள இந்தியர்களின் குறைகளைக் களையத் தான் இந்த மையம் துவங்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.

இந்த நிகழ்ச்சி இந்தியா கிளப்பில் நடந்தது. இந்த 24 மணி நேரத் தொலைபேசி சேவை உலகிலேயே முதன்முறையாக இந்தியா தான் துவங்கியுள்ளது. இதை வெளிநாட்டு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சகம் துவக்கியுள்ளது.

இது பிரச்சனைகளில் சிக்கி வழி தெரியாமல் தவிக்கும் இந்தியத் தொழிலாளர்களுக்கு பேருதவியாக இருக்கும்.

முஸ்லீம்கள் ரத்ததானம் செய்வது இஸ்லாமுக்கு எதிரானது-தாருல் உலூம் தியோபான்ட்


முசாபர்நகர்: ரத்ததானம் செய்வது இஸ்லாமின் நெறிமுறைகளுக்கு எதிரானது என்று இஸ்லாமிய அமைப்பான தாருல் உலூம் தியோபான்ட் கூறியுள்ளது.

ரத்ததானம் மட்டுமல்லாமல் உறுப்பு தானம் செய்வதும் இஸ்லாமுக்கு விரோதமானது என்றும் அது கூறியுள்ளது. அதேசமயம், உயிருக்குப் போராடி வரும் ஒருவருக்கோ அல்லது குடும்பத்தினருக்கோ ரத்தம் கொடுப்பது தவறில்லை என்றும் அது தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தனது இணையதளத்தின் பாத்வா (தடை) பிரிவில் இந்த தகவலை வெளியிட்டுள்ளது தியோபான்ட். இதுகுறித்து அதில் கூறுகையில், ரத்ததானம் செய்வதோ, உடல் உறுப்புகளை தானம் செய்வதோ இஸ்லாமில் அனுமதிக்கப்படவில்லை.

நமது உடல் உறுப்புகளை இஷ்டப்படி செயல்படுத்தும் உரிமை நமக்கு இல்லை. நமது உடலுக்கு நாம் சொந்தக்காரர்களும் இல்லை. எனவே ரத்தமோ அல்லது உடல் உறுப்புகளோ தானமாக வழங்கப்பட முடியாதவையாகும்.

உயிருக்குப் போராடி வரும் ஒருவருக்குத் தேவைப்பட்டாலோ அல்லது நமது குடும்பத்தினர், உறவினருக்குத் தேவைப்பட்டாலோ கொடுக்கலாம். அதற்கு அனுமதி உண்டு என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரத்ததானம் குறித்த ஒருவரின் கேள்விக்குப் பதில் அளிக்கும் விதமாக இதை தெரிவித்துள்ளது தியோபான்ட்.

ஆனால் இந்த தடை சரியல்ல என்று பிரபல இஸ்லாமிய மார்க்க அறிஞர் மெளலானா வஹியுதீன் கான் கூறியுள்ளார். இந்த பாத்வாவால், இஸ்லாமியர்கள் ரத்ததானம் தருவதிலிருந்து விலகிப் போக மாட்டார்கள்.

முடிந்தவரை ரத்ததானம் செய்யுங்கள் என்று இஸ்லாமியர்களுக்கு நாங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். அதை தொடர்ந்து சதெய்வோம் என்றார் அவர்.

இதேபோல பல்வேறு இஸ்லாமிய அறிஞர்களும் தியோபான்ட் அமைப்பின் உத்தரவை நிராகரித்துள்ளனர்.

இதுகுறித்து டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக இஸ்லாமிய படிப்புக்கான துறை தலைவர் அக்தருல் வாஸ் கூறுகையில், ரத்ததானம் என்பது உயிரைக் காக்கும் ஒரு விஷயம். ரத்ததானம் தருவதில் எந்தத் தவறும் இல்லை என்று இஸ்லாமிய பிக் அகாடமி ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது என்றார்.