தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

18.1.11

இராக்கில் தற்கொலைப்படை தாக்குதல்: 60 பேர் பலி

திக்ரித் (இராக்), ஜன. 18: இராக் முன்னாள் சர்வாதிகாரி சதாம் ஹுசைன் சொந்த ஊரான திக்ரித்தில் செவ்வாய்க்கிழமை தற்கொலைப் படையைச் சேர்ந்த மனித குண்டு நடத்திய தாக்குதலில் 60 பேர் பலியாகினர். 150 பேர் காயம் அடைந்தனர்.
 போலீஸ் பணிக்கு ஆட்களை தேர்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முகாமுக்கு வந்திருந்தவர்களுக்கு நடுவில் புகுந்த மனித குண்டு இந்த தாக்குதலை நடத்தினார்.
 இறந்தவர்களில் பலர் போலீஸ் வேலைக்கு சேருவதற்காக வந்திருந்தவர்கள்
 
 இராக் தலைநகர் பாக்தாதுக்கு வடக்கே 150 கிமீ தொலைவில் உள்ளது திக்ரித் நகரம். காலை சுமார் 10.15 மணி அளவில் நடந்த இந்த பயங்கரவாத தாக்குதலில் காயம் அடைந்தவர்கள் திக்ரித்தில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
 போலீஸ் வேலைக்கான முகாமுக்கு வந்திருந்தவர்கள் சுமார் 300 பேர் வரிசையாக நின்றிருந்தனர். அப்போது தற்கொலைப்படைத் தீவிரவாதி இந்த தாக்குதலை நடத்தியுள்ளார் என காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சதாம் ஹுசைன் குடும்பத்தாரின் சொந்த பகுதி திக்ரித். இது சன்னி பிரிவினர் நிறைந்த பகுதி. எனினும் ஷியா பிரிவினர்தான் ஆட்சி நிர்வாகத்தில் அமர்ந்துள்ளனர். அவர்களுக்கு எதிராகவே அவ்வப்போது பயங்கரவாத தாக்குதல் நடக்கிறது.
இராக்கை விட்டு இந்த ஆண்டில் முழுமையாக வெளியேற உள்ள அமெரிக்க படைகள், தீவிரவாத எதிர்ப்பு வேட்டையை நிறுத்திக்கொண்டுள்ளன. இந்த நிலையில் இராக் போலீஸ் மற்றும் பாதுகாப்புப் படைகள் மீதான தாக்குதலை தீவிரவாதிகள் முடுக்கிவிட்டுள்ளனர் என கூறப்படுகிறதுஇந்த இடுகை தங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள இன் ட்லியில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்களேன்.நன்றி

ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு தடை! தே.காங்கிரஸ்

புதுடில்லி: நாட்டில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் இந்துத்துவா இயக்கங்களான ஆர்.எஸ்.எஸ்., மற்றும் அபினவ் பாரத் அமைப்புகள் மீது தடை விதிக்க வேண்டும் என, தேசியவாத காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை நேற்று சந்தித்துப் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் தாரிக் அன்வர், இச்சந்திப்புக்கு பின் நிருபர்களிடம் பேசினார்: மாலேகான் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என, அமைச்சரிடம் தெரிவித்தேன். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு, இந்துத்துவா தீவிரவாத அமைப்புகள் தான் காரணம் என்பது தெரிய வந்துள்ளது.
எனவே, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம்கள் அனைவரையும் விடுவிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.  மேலும், 1994ம் ஆண்டு முதல் நடந்த அனைத்து குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதிகளை கொண்டு உண்மையான விசாரணை நடத்த முன்வர வேண்டும் எனவும் கேட்டுள்ளேன். மேலும் நாட்டில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் ஆர்.எஸ்.எஸ்., மற்றும் அபினவ் பாரத் அமைப்புகள் மீது தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளேன். என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி பொதுச்செயலர் தாரிக் அன்வர் கூறியுள்ளர்.இந்த இடுகை தங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள இன் ட்லியில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்களேன்.நன்றி

டெல்லி மஸ்ஜித் தகர்ப்பு - நடந்தது என்ன?

கடந்த ஜனவரி 12 ஆம் தேதி டெல்லி வளர்ச்சி ஆணையத்தினரால் இடித்து நீக்கப்பட்ட நூர் பள்ளிவாசல் இடம் வக்ஃப் போர்டுக்குச் சொந்தமானது என்பதற்கான கெஸட் ஆதாரம் வெளியாகியுள்ளது. அதே நேரம் இப்பள்ளிவாசலின் பக்கத்தில் கட்டப்பட்டுள்ள வால்மீகி கோவில் அரசு நிலத்தில் சட்ட விரோதமாகக் கட்டப்பட்டது எனவும் சட்ட விரோதமாகக் கட்டப்பட்ட கட்டிடங்களை நீக்கம் செய்வதற்காக நடவடிக்கை துவங்கிய டெல்லி வளர்ச்சி ஆணையம் இக்கோயில் நிலத்தைக் கோயிலுக்காக விட்டுக்கொடுத்தது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட பள்ளிவாசல் எனக்கூறி, டெல்லி வளர்ச்சி ஆணையம் இடித்து நீக்கம் செய்த நூர் பள்ளிவாசல் கட்டப்பட்டிருந்த 350 சதுரமீட்டர் நிலம், முஸ்லிம்களுக்கென வக்ஃப் செய்யப்பட்டு வக்ஃப் போர்டுக்குச் சொந்தமானது என்பதற்கான 1975 ஆம் ஆண்டு கெஸட் ஆதாரம் வெளியாகியுள்ளது. 1947-48 ஆம் ஆண்டின் ஜமாபந்தி(நிலத்தின் உரிமையாளர்கள் குறித்த விவரங்கள் அடங்கிய குறிப்பு)யில் இவ்விவரம் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், இப்பள்ளிவாசலை இடித்து நீக்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிடவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

லெஃப்டினண்ட் கவர்னரின் அலுவலகக் கட்டுப்பாட்டின் கீழுள்ள மதத்துறையைக் கையாளும் கமிட்டியே இப்பள்ளிவாசலை இடித்து நீக்குவதற்கு அனுமதி கொடுத்துள்ளது. இது தொடர்பாக நடைபெற்றதாகக் கூறப்படும் இக்கமிட்டியின் கூட்டக் குறிப்புகளைக் கோரி, தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் கீழ் கவர்னர் அலுவலகத்தில் முஸ்லிம்கள் பல மனுக்கள் தாக்கல் செய்தும் இதுவரை அக்கூட்டக் குறிப்புகள் வழங்கப்படவில்லை.

இக்கமிட்டியின் உறுப்பினர்கள் யாவர் என்பது குறித்த விவரங்களைக் கூட டெல்லி அரசு இதுவரை வெளிப்படுத்தவில்லை. பல்வேறு சந்தேகங்கள் நிலைகொண்டிருந்த நேரத்திலேயே பள்ளிவாசல் இடித்து நீக்கம்செய்யப்பட்டுள்ளது.

இப்பள்ளிவாசல் இடித்து நீக்கப்படுவதற்கு முன்பு, இது நிலைகொண்டிருந்த நிலம் தொடர்பாக நடந்த சம்பவங்கள் பின்வருமாறு:

* ஜங்புரா ரெசிடன்ஸ் வெல்ஃபேர் அஸோசியேஷன், "ஜங்புராவிலுள்ள பள்ளிவாசல் உட்பட சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடித்து நீக்கம் செய்ய வேண்டும் எனவும் இப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ள மண்ணை நீக்கி இடத்தைத் தூய்மைபடுத்த வேண்டும்" எனவும் கூறி 2006 ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. இதனைத் தொடர்ந்து, இப்பகுதியில் சட்ட விரோதமாகக் கட்டப்பட்ட கட்டிடங்களை இடித்து, இப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ள மண்ணை நீக்கி சுத்தம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

* 2006 நவம்பர் மாதம், இப்பகுதியிலுள்ள சட்ட விரோத கட்டிடங்களை டெல்லி வளர்ச்சி ஆணையம் இடித்து நீக்கியது. மேலும் அப்பகுதியிலுள்ள நூர் பள்ளிவாசல் மற்றும் வால்மீகி கோயில் கட்டிடங்கள் தொடர்பாக இறுதி தீர்மானமெடுக்க மதத்துறை கமிட்டிக்குப் பரிந்துரை செய்தது.

* 2007 ஜனவரி மாதம், டெல்லி உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச், ஜங்புரா பகுதி விரிவாக்கம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க, டெல்லி முனிசிப்பல் கார்ப்பரேஷன் மற்றும் டெல்லி வளர்ச்சி ஆணையத்துக்கு உத்தரவிட்டது.

* 2007 ஜூலை 30 அன்று, ஜங்புரா பகுதியின் தற்போதைய நிலவரம் குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, "அப்பகுதியில் குவித்து வைக்கப்பட்டிருந்த மண்ணை நீக்கம் செய்ததாகவும் சட்ட விரோதமாகக் கட்டப்பட்ட கட்டிடங்கள் அனைத்தையும் இடித்து நீக்கிவிட்டதாகவும்" டெல்லி முனிசிப்பல் கார்ப்பரேசன் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.

* 2008 ஜூலை 7 ஆம் தேதியன்று, "நூர் பள்ளிவாசல் உட்பட, அப்பகுதியில் கட்டப்பட்டுள்ள அனைத்து சட்டவிரோத கட்டிடங்களையும் நீக்கம் செய்ய வேண்டும்" எனக்கோரி ரெசிடென்ஸ் அஸோசியேஷன் மீண்டும் நீதிமன்றத்தை அணுகியது.

* "ஜங்புரா பகுதியில் கட்டப்பட்டுள்ள அனைத்து சட்டவிரோத கட்டிடங்களையும் நீக்கம் செய்ய வேண்டும்" என்று 2008 ஜூலை 9 ஆம் தேதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

* 2009 ஜூன் மாதம், "நூர் பள்ளிவாசலை இடித்து நீக்கம் செய்யவும் வால்மீகி கோயில் இடத்தைக் கோயிலுக்காக விட்டுக்கொடுக்கவும்" லெஃப்டினண்ட் கவர்னர் அலுவலக மதத்துறை கமிட்டி சிபாரிசு செய்தது. இதனைத் தொடர்ந்தே பள்ளிவாசலை இடிப்பதற்கான முயற்சிகளை டெல்லி வளர்ச்சி ஆணையம் ஆரம்பித்தது.

* கடந்த 2009 ஆகஸ்ட் மாதத்திலிருந்து டெல்லி வளர்ச்சி ஆணையம் பள்ளிவாசலை இடிப்பதற்கான முயற்சிகளை எடுக்க ஆரம்பித்தது. ஆனால், அப்பகுதி மக்களின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக உடனடியாக அதைச் செய்ய இயலவில்லை.

* 2010 அக்டோபர் மாதம், பள்ளிவாசலை இதுவரை இடித்து நீக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி டெல்லி வளர்ச்சி ஆணையம் மற்றும் டெல்லி முனிசிப்பல் கார்ப்பரேசன் ஆகியவற்றுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை ஜங்புரா ரெசிடென்ஸ் அஸோசியேஷன் தொடுத்தது.

* நூர் பள்ளிவாசல் கட்டிடம் நிலைகொள்ளும் நிலம் வக்ஃப் போர்டுக்குச் சொந்தமானது என்பதற்கான ஆதாரத்தை 2010 அக்டோபர் 26 ஆம் தேதி வக்ஃப் போர்டு டெல்லி வளர்ச்சி ஆணையத்திடம் சமர்ப்பித்தது. இதனைக் கண்டுகொள்ளாமலேயே டெல்லி வளர்ச்சி ஆணையம் தங்கள் மீது தொடுக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலிருந்து தப்பிப்பதற்காக கடந்த 12 ஆம் தேதி பள்ளிவாசலைக் காவல்துறை பாதுகாப்புடன் இடித்துத் தள்ளியது.

* அதனைத் தொடர்ந்து, "ஜங்புரா பகுதியிலுள்ள அனைத்து சட்ட விரோத கட்டிடங்களையும் இடித்து நீக்கி விட்டதாகவும் ஆகவே தங்களுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று கோரி டெல்லி வளர்ச்சி ஆணையம் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

பட்டாவுடன் தங்களுக்குச் சொந்தமான இடத்தில் கட்டப்பட்டு, நீண்டகாலமாக ஐவேளை தொழுகை நடத்தி வந்த பள்ளிவாசலை அநியாயமாக இடித்து நீக்கிய நடவடிக்கையை எதிர்த்து, டெல்லியில் முஸ்லிம்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஒருநாள் முழு கடையடைப்புப் போராட்டமும் நடத்தப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஞாயிறன்று பள்ளிவாசல் இடித்து நீக்கப்பட்ட இடத்தில் அப்பகுதி மக்கள் தற்காலிகமாக கொட்டகை ஒன்றைக் கட்டி, அதில் தொழுகை நடத்தினர். தொழுகைக்காக சுத்தம் செய்வதற்கான வசதியை அருகிலுள்ள கோயிலில் அப்பகுதி இந்து மக்கள் ஏற்பாடு செய்து கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

தற்காலிக கொட்டகை அமைக்கும்பணி நள்ளிரவு வரை நடந்தது. உடனடியாக நிரந்தரமாக பள்ளிவாசலைக் கட்டும் நடவடிக்கையை மேற்கொள்ள, செங்கல் மற்றும் மணல் போன்றவற்றையும் அப்பகுதியில் இறக்கியுள்ளனர். அப்பகுதி மக்களின் முழு ஒத்துழைப்புடன் இது நடந்து வருவதால் காவல்துறை அதனைக் கண்டுகொள்ளவில்லை.

மேலும், டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித், "தற்காலிக கொட்டகையில் நடக்கும் தொழுகையைத் தடுக்க வேண்டாம்" என காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதோடு "இடிக்கப்பட்ட இடத்தில் நிரந்தரமாக பள்ளிவாசல் கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் அறிவித்துள்ளார்.

இதனால் தொடர்ச்சியாக நடந்த போராட்டமும் பதட்டமும் சற்று தணிந்துள்ளது.
இதற்கிடையே, "டெல்லி வளர்ச்சி ஆணையம் கையகப்படுத்திய இடத்தில் சட்ட விரோதமாக அத்துமீறி தொழுகை நடத்துவதற்கும் அப்பகுதியைக் கையகப்படுத்துவதற்கும் டெல்லி மஸ்ஜித் இமாம் புகாரி மக்களைத் தூண்டியதாகவும் இதற்கு டெல்லி முதல்வர் துணை நின்றதாகவும் இது சட்டத்தை மீறியச் செயல்" எனவும் கூறி ஜங்புரா ரெசிடென்ஸ் அஸோசியேஷன் டெல்லி முதல்வர் மற்றும் டெல்லி ஜுமா மஸ்ஜித் இமாம் புகாரி ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு புகாரொன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.இந்த இடுகை தங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள இன் ட்லியில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்களேன்.நன்றி