தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.12.10

விக்கிலீக் - தகவல் கசிவு இல்லை; திட்டமிட்ட நாடகம் : நஜாத்!

அமெரிக்காவின் ரகசிய ஆவணங்களை விக்கிலீக் இணையதளம் வெளியிட்டது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்த ஈரான் அதிபர் அஹமதி நஜாத், இந்தத் தகவல்கள் கசியவில்லை. இவை வெளியிடப்பட்டுள்ளன. இது திட்டமிட்ட நாடகம் என்று கூறியுள்ளார்.

ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மதி நஜாதிடம் பிரஸ் தொலைக்காட்சி விக்கிலீக் மூலம் தகவல்கள் கசிந்தது குறித்து கேட்டபோது, "நான் உங்கள் கூற்றைச் சரி செய்ய விரும்புகிறேன். இந்த ஆவணங்கள் கசியவிடப்படவில்லை. இவை ஒரு ஒழுங்கமைப்பில் வெளியிடப்பட்டுள்ளன" என்று கூறினார்.

இந்த ஆவணங்களை வெளியிட்டதே அமெரிக்க அரசுதான். இதன் மூலம் அவர்களாகவே தீர்ப்பு எழுத விரும்புகின்றனர். இந்த ஆவணங்களுக்கு சட்ட மதிப்பு எதுவும் இல்லை. இந்த ஆவணங்களை வெளியிட்டதன் மூலம் அமெரிக்கா விரும்பும் அரசியல் மாற்றங்கள் எதுவும் ஏற்படப் போவதில்லை என்றும் ஈரானிய அதிபர் நஜாத் கூறினார்.

விக்கிலீக்ஸ் கசியவிட்டதாகக் கூறப்படும் இந்த நாடகமே கருத்து சொல்வதற்குத் தகுதியானதல்ல. இதனை ஆராய்வதன் மூலம் தங்களுடைய நேரத்தை விரயம் செய்ய எவரும் விரும்பமாட்டார்கள் என்றும் நஜாத் கூறினார்.

வளைகுடாப் பகுதியில் உள்ள நாடுகள் ஒவ்வொன்றும் மற்ற நாடுகளுடன் நட்பாகவே உள்ளன. இந்த ஆவணங்கள் வெளியிடப்பட்டதன் மூலம் நட்பு நாடுகளிடையே உறவுகள் பாதிக்காது என்றும் அவர் கூறினார்.

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த வேண்டும் என்று சவூதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் தலைவர்கள் அமெரிக்காவை வலியுறுத்தியதாக வெளியான தகவலை மறுத்த நஜாத், இது ஈரானை மனோ ரீதியாக தாக்கும் அமெரி்க்காவின் போர் தந்திரமே என்று குறிப்பிட்டார்
.

விக்கிலீக்ஸ் விவகாரம்: உலகத் தலைவர்களிடம் வருத்தம் தெரிவித்த ஹிலாரி!


வாஷிங்டன்: விக்கிலீக்ஸ் வெளியிட்ட ரகசியங்கள் தொடர்பாக, 12 நாட்டுத் தலைவர்களிடம் வருத்தம் தெரிவித்தார் அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் ஹிலாரி கிளிண்டன்.

உலகத் தலைவர்கள் குறித்து அமெரிக்க அதிகாரிகள் அடித்த மட்டமான கமெண்டுகள், ஒவ்வொரு நாட்டு ரகசியங்கள் குறித்தும் தகவல் அமெரிக்க தூதர்கள் வாஷிங்டனுக்கு பரிமாறிய தகவல் போன்றவற்றை அம்பலப்படுத்தி வருகிறது விக்கிலீக்ஸ் இணையதளம்.

இது பல நாட்டுத் தலைவர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. உலக நாடுகளுடன் அமெரிக்காவுக்கு உள்ள நட்பு மற்றும் தொடர்புகளையே துண்டித்து விடுமோ எனும் அளவுக்கு படுமோசமான கமெண்டுகள், ரகசியங்கள் அம்பலமாகியுள்ளன.

இதனால் அதிர்ச்சியடைந்துள்ள அமெரிக்கா, உடனடியாக சர்வதேச தலைவர்களைத் தொடர்பு கொண்டு, அமெரிக்க அதிகாரிகள் மற்றும் அரசியல் மட்டத்தில் அடிக்கப்பபட்ட கமெண்டுகளுக்காக வருத்தம் தெரிவிக்க ஆரம்பித்துள்ளது.

இது தொடர்பாக இதுவரை ஆப்கானிஸ்தான், கனடா, சீனா, இங்கிலாந்து, பாகிஸ்தான், ஜெர்மனி, தென் கொரியா, பிரான்ஸ், இத்தாலி உள்பட 12 நாட்டுத் தலைவர்களிடம் நடந்தவற்றுக்கு வருத்தம் தெரிவித்தார். மேலும் பல நாடுகளின் தலைவர்களுக்கும் அமெரிக்காவின் வருத்தத்தைத் தெரிவித்து, உறவு கெடாமல் பார்த்துக் கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளார் ஹிலாரி.