தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

20.10.11

பெங்களூர் சிறப்பு நீதிமன்றில் ஜெயலலிதா நேரில் ஆஜர் : விசாரணையில் 400 கேள்விகள்


சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா,
இன்று பெங்களூரில் உள்ள சிறப்பு நீதிமன்றில் நேரில் ஆஜரானார்.
இன்று காலை சென்னையிலிருந்து சிறப்பு விமானம் மூலம் பெங்களூரு வந்த அவர், கர்நாடக காவற்துறையின் கடும்
பாதுகாப்புக்கு
மத்தியில், விமானநிலையத்திலிருந்து பரப்பன அக்ரஹஹாரத்தில் உள்ள மத்திய சிறை வளாகத்தின் சிறப்பு நீதிமன்றத்திற்கு புல்லட் புரூப் வசதி கொண்ட சிறப்பு காரில் வருகை தந்தார். அவரை தொடர்ந்து சுமார் 20 கார்கள் பாதுகாப்புக்காக பயணம் மேற்கொண்டன.

ஜெயலலிதாவுடன் அவரது தோழி சசிகலாவும், உறவினர் இளவரசியும் ஆஜராகினர். ஜெயலலிதாவின் வருகையை முன்னிட்டு, நீதிமன்றத்தை ஒட்டிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததுடன், நீதிமன்றத்தில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்திலேயே தடுப்புக்கள் அமைக்கப்பட்டிருந்தன.

நீதிமன்ற உத்தரவின் படி ஊடகவியலாளர்கள் யாரும் உள் வளாகத்திற்கு அனுமத்திக்கப்படவில்லை. இன்று மாலை வரை நீதிமன்றத்தில் ஜெயலலிதாவிடம் விசாரணை நடைபெறுகிறது. அவரிடம் சுமார் 400 க்கு மேற்பட்ட கேள்விகள் கேட்கப்படவிருப்பதாக நீதிமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. ரூ 66 கோடி பெறுமதியான சொத்து முறைகேடாக சேர்க்கப்பட்டதா என்பதையொட்டி விசாரணை நடைபெற்று வருகிறது. நாளையும் விசாரணை தொடருமாயின் அவர் பெங்களூரில் தங்குவதற்கு சகல பாதுகாப்பும் வழங்கப்படும் என பெங்களூர் நகர பொலிஸ் கமிஷினர் ஜோதி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பாதுகாப்பு காரணங்கள் உறுதி செய்யப்படாததால், தான் நீதிமன்றில் நேரில் ஆஜராவதை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைக்க வேண்டுமென உயர் நீதிமன்றத்திடம் ஜெயலலிதா கோரிக்கை விடுத்த போதும், கர்நாடக அரசின் பாதுகாப்பு உறுதிமொழியை அடுத்து, அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இதனிடையே ஜெயலலிதா நீதிமன்றில் ஆஜராகியுள்ளது குறித்து கருணாநிதி கருத்து தெரிவிக்கையில், 'ஜெயலலிதா நீதிக்கு தலை வணங்கியிருக்கிறார்' என்றார்.

இதேவேளை ஜெயலலிதாவுக்கு எதிராக பெங்களூர் நீதிமன்ற வளாகத்தில் கர்நாடகத்தை சேர்ந்த தலித் அமைப்பு ஒன்று ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது.

பரமக்குடியில் பொலிஸார் நிகழ்த்திய துப்பாக்கிசூட்டு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, சமதா சைனிக் தளம் எனும் குறித்த அமைப்பு நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தலுத்துக்கள் மீதான தாக்குதலுக்கு தமிழக முதல்வர் பொறுப்பேற்று உடனடியாக பதவி விலக வேண்டுமென கோஷமெழுப்பினர்.

0 கருத்துகள்: