தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

6.2.12

தடை இருந்தும் தடை இல்லாமல் விற்பனையாகும் லாட்டரி


ம்பிக்கைகள் பலவிதம்; அதுபோல் சூதாட்டங்களும் பலவிதம். மூட நம்பிக்கைகள்கூட மனிதர்களுக்கு ஆதரவு கொடுக்கும். ஆனால், சூதாட்டங்கள் எல்லாமுமே கண்ணைக் கவர்ந்து மாயத் தோற்றத்தில் மனிதனைத் தள்ளிவிடும். குதிரைப் பந்தய சூது பல மனிதர்களை முடமாக்கி படுக்க வைத்துவிட்டது. மங்காத்தா, ரம்மி என சீட்டுப் பைத்தியம் ஆயிரக்கண க்கானவர்களின் வாழ்க்கையைக் கலைத்து அலங்கோலமாக்கிவிட்டது.ஆனா ல், லாட்டரி?அதிர்ஷ்ட
த்தின் மூலத்தில் நடக்கும் இந்த சூது ஏதோ ஒருவனை லட்சாதிபதியாக்கும்; கோடீஸ்வரனாக்கும். ஆனால் இதே சூது, பல ஆயிரக்கணக்கான குடும்பங்களை பரிசு விழாத லாட்டரிச் சீட்டுகளைப்போல் கசக்கிப் போட்டுவிடும்.  லாட்டரி என்ற இந்த மோகினி பலரை பிச்சைக்காரர்களாக்கிவிட்டது; பலரை பைத்தியமாக்கிவிட்டது; ஏன், பலரின் உயிர்களையும் உறிஞ்சிவிட்டது. குலுக்கல், ஒரு நம்பர், சுரண்டுவது என பல முகங்களில் இந்த வில்லன் பல ஆண்டுகளாக நம் மக்களை துயரின் பள்ளத்தாக்கில் ஊசலாட வைத்துவிட்டான். இந்த வில்லனை எக்ஸ்ரேயாக்கி அலசுவதுதான் இந்த ஸ்பெஷல் ஸ்டோரி!
மண்ணில் விழுந்த அண்ணாவின் எண்ணம்!

‘‘விழுந்தால் வீட்டுக்கு... விழாவிட்டால் நாட்டுக்கு..!’’ என்ற கோஷத்துடன் சுமார் 44 ஆண்டுகளுக்கு முன்பு லாட்டரிச் சீட்டு விற்பனையை தமிழகத்தில் தொடங்கி வைத்தார் அப்போதைய முதல்வர் பேரறிஞர் அண்ணா. ஏழை, எளிய மக்களை லட்சாதிபதிகளாக்கும் எண்ணத்துடனும், அதே சமயம் அரசுக்கு வருவாய் ஈட்டும் நோக்கிலும் ஆரம்பிக்கப்பட்ட லாட்டரி, காலப்போக்கில் ஏழைகளை ஓட்டாண்டிகளாக்கும் என்று அண்ணாவே நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்.

தமிழகத்தில் லாட்டரிச் சீட்டு தொடங்கப்பட்ட போது, அரசு லாட்டரி மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. காலப்போக்கில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில லாட்டரிகளும் தமிழகத்திற்குள் புகுந்து கீழ்த்தட்டு மக்களின் பாக்கெட்டை பதம் பார்க்க ஆரம்பித்தன.

எப்போதும் போராடிக்கொண்டிருக்கும் லட்சக்கணக்கான அடித்தட்டு மக்கள் லாட்டரி புதைமணலில் மாட்டிக்கொண்டு தத்தளித்ததைக் கண்ட அன்றைய முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2003-ம் ஆண்டு லாட்டரிச் சீட்டு விற்பனையை தடை செய்தார். இருந்தாலும், தடையை மீறி பல இடங்களிலும், வெளிமாநில லாட்டரிச் சீட்டு விற்பனை நடந்துகொண்டுதான் இருக்கிறது. லாட்டரியைத் தடை செய்தாலும் அதிர்ஷ்டத்தை யாரும் தடை செய்ய முடியாது என்ற எண்ணத்துடன் இன்னும் லாட்டரிச் சீட்டுகளை பலர் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
மில் தொழிலாளர்கள், நெசவுத் தொழிலாளர்கள், சுமை தூக்குபவர்களைக் குறிவைத்து தற்போது கள்ள லாட்டரி விற்பனை கனஜோராக நடந்து வருகிறது. முன்பெல்லாம் கடைகளில் வைத்து வியாபாரம் செய்தார்கள். இப்போது கையில் வைத்து விற்கிறார்கள். இதுதான் வித்தியாசம்.

நதி மூலம் ரிஷி மூலம் எங்கே?

மாபெரும் நகரமான கொல்கத்தாதான் கள்ள லாட்டரிச் சீட்டுகள் விற்பனைக்கான முக்கிய ஸ்தலம். அங்கிருந்து ஆந்திரம், கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்து சேரும் தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுகள், தமிழகத்துக்குள் கூரியர் சர்வீஸ் மூலமாக பண்டல் பண்டல்களாக வந்து சேருகின்றன. கள்ள லாட்டரிகளுக்கு தலைமைச் செயலகம் திருச்சியில்தான் இருக்கிறது. அங்கிருந்து ஆம்னி பஸ்கள், லாரிகள், வேன்கள் மூலமாக தமிழகம் முழுவதும் லாட்டரிச் சீட்டுகள் சென்றடைகின்றன. கள்ள லாட்டரியின் இந்த நீண்ட பயணத்துக்கு போலீஸாரின் ஆசிர்வாதமும் உண்டு. இந்தக் கள்ள லாட்டரிகளின் அவதாரங்கள்தான் எவ்வளவு..!

தினக் குலுக்கல்

தினக் குலுக்கலில் இரண்டு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் ‘சிங்கிள்’ லாட்டரிகள் தற்போது இல்லவே இல்லை. மாறாக, 50 சீட்டுகள் முதல் 200 சீட்டுகள் வரை ஒரே நம்பரில் வெளியிடுகிறார்கள். ஒரு சீட்டுக்கு 1,000 ரூபாய் பரிசு விழுந்தால், 50 சீட்டுக்கு சேர்த்து சுளையாக 50 ஆயிரம் கிடைக்கும். போலீஸாரின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு வியாபாரம் செய்ய வியாபாரிகளுக்கு இந்த தினக் குலுக்கல் லாட்டரிதான் உதவுகிறது. பரிசு விழுந்தவர்கள் யாரும் பணத்தை வாங்க லாட்டரி வியாபாரிகளைத் தேடி அலைய வேண்டியதில்லை; அவர்களே வீடு தேடி வந்து கொடுக்கிறார்கள்.

பம்பர் குலுக்கல்

பண்டிகைக் கால விசேஷ நாட்களுக்கான சிறப்புக் குலுக்கல் இது. இதில், மிகப் பெரிய பரிசுத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கிறார்கள். கடந்த காலங்களில் பம்பர் குலுக்கலில் தமிழக அரசு பரிசுச் சீட்டு பெற்றிருந்த வரவேற்பினை வேறு எந்த மாநில லாட்டரிச் சீட்டுகளும் பெறவில்லை. தற்போது, கேரளாவில் மட்டும் இந்த வகை லாட்டரிச் சீட்டுகள் விற்பனையாகின்றன. இதுபோன்ற லாட்டரிகளும் தற்போது தமிழகத்தில் தாராளமாகப் புழக்கத்தில் இருக்கிறது.

ஆன்லைன் லாட்டரி

வெறும் ஆறு நம்பர்களை மட்டுமே இவை கொண்டிருக்கும். இதற்கென சீரியல்கள் எதுவும் கிடையாது. வழக்கமான பரிசுச் சீட்டு வடிவில் இது இருக்காது. ‘கம்ப்யூட்டர் பில்லிங் பிரின்ட் அவுட்டாக’ இது விற்கப்பட்டு வருகிறது. அதிர்ஷ்ட எண்ணைத் தேர்வு செய்து அதனை கம்ப்யூட்டர் பிரின்ட் அவுட் மூலம் பரிசுச் சீட்டாகப் பெறலாம். ஆன்லைனில் குலுக்கப்படும் இதற்கு முதல் பரிசாக ஒரு கோடி ரூபாய் வரையில் தரப்படுகிறது. வாரத்துக்கு ஒரு முறை குலுக்கல். இதை எந்த மாநிலம் நடத்துகிறது என்று இதுவரை தெரியவில்லை. இதில் முதல் பரிசு யாருக்கும் விழுந்ததாகத் தெரியவில்லை. கொல்கத்தா, பெங்களூரு போன்ற மாநகரங்களில் இதுபோன்ற ஆன்லைன் லாட்டரி நிறுவனங்கள் அதிகமாகச் செயல்படுகின்றன.

ஒரு நம்பர் லாட்டரி

மிஸோரம் மாநிலத்தில் இருந்துதான் இந்த லாட்டரி அதிகம் வெளியிடப்பட்டு வருகிறது. முதல் பரிசு ஐயாயிரம் ரூபாய். இரண்டாவது பரிசு நூறு ரூபாய். ஆறு எண்களைக் கொண்டிருக்கும் இதில் பரிசுக்குரியதாக ஒரேயொரு எண் மட்டும் அறிவிக்கப்படும். இந்த லாட்டரி முடிவுகள் போன் மூலம் எங்கிருந்தோ அறிவிக்கப்படுகிறது. இதில், அரைமணி நேரத்துக்கு ஒருமுறை குலுக்கல் நடத்தப்படுகிறது.

சுரண்டல் லாட்டரி

லாட்டரிச் சீட்டின் எண்கள் ஒருவிதமான ரசாயனப் பூச்சு பூசப்பட்டு மறைக்கப்பட்டிருக்கும். இந்த லாட்டரிச் சீட்டுடனே அதற்குரிய முடிவுகளும் அச்சிடப்பட்டு தரப்படும். லாட்டரிச் சீட்டினை வாங்கி அதன் மேலிருக்கும் ரசாயனப் பூச்சை சுரண்டி எடுத்தால் எண்கள் தெளிவாகத் தெரியும். அச்சிடப்பட்ட முடிவு எண்ணுடன், சுரண்டப்பட்ட லாட்டரியின் எண் ஒத்துப்போனால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

அரங்கேறும் தில்லுமுல்லுகள்!

கடைசியாக, தமிழக அரசு வெளியிட்ட லாட்டரிச் சீட்டில், முதல் பரிசாக ரூபாய் ஏழு கோடி அறிவிக்கப்பட்டிருந்தது. டிக்கெட் முழுவதையும் அச்சிட்டு அதனை கே.ஏ.எஸ்.சேகர், ராமதாஸ், மார்ட்டின், எல்.கே.எஸ்.கனி, எஸ்.எஸ்.மணியம் போன்ற மொத்த வியாபாரிகளில் ஒருவருக்கு விற்பனை செய்துவிடுவார்கள். இதனால் அரசுக்கு எந்தவிதமான நஷ்டமும் இல்லை. விற்பனையை மொத்தமாக ஒருவருக்குத் தந்தாலும், குலுக்கலை தமிழக அரசே நடத்தியது.

ஒட்டுமொத்த பரிசுச் சீட்டையும் விலை தந்து வாங்கிய மொத்த வியாபாரியும் இந்தக் குலுக்கலின்போது ஒரு பார்வையாளராகத்தான் அந்த அரங்கத்துக்குள் அமர்ந்திருக்க முடியும். இதில் எந்த மோசடிக்கும் வாய்ப்பில்லாமல் இருந்தது.

ஆனால், வெளி மாநில லாட்டரிகள் தமிழகத்தை ஆக்கிரமித்துக் கொண்டபிறகு, குலுக்கலில் பல்வேறு தில்லுமுல்லுகள் அரங்கேற்றப்பட்டன.
விற்பனையாகாத டிக்கெட்டுகளின் விவரங்களை குலுக்கலுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே ஹோல்சேல் ஏஜெண்டுகளிடம் விற்பனையாளர்கள் தெரிவித்துவிட வேண்டும். இந்த டிக்கெட் விவரங்களுக்கு ஏற்றாற்போல குலுக்கல் மற்றும் பரிசு விவரங்களும் மாற்றியமைக்கப்பட்டு மோசடி செய்யப்பட்டது.

‘‘லாட்டரிச் சீட்டு விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்ட பிறகும் இதே நிலைதான் தொடர்கிறது’’ என்று சொல்லும் சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கந்தம்பட்டி மணிவண்ணன், ‘‘சேலம் மாநகரத்துல மட்டும் 123 லாட்டரிச் சீட்டுக் கடைகள் இயங்குகின்றன.  மாதந்தோறும் 46 லட்ச ரூபாய் வரை லாட்டரி மூலம் சேலம் போலீஸாருக்குக் கிடைக்கிறது. இந்த லாட்டரிச் சீட்டுகளுக்கு ‘ரிசல்ட்டை’ வெளியிடுவதும் இவர்களே என்பதால், அதில் பெரிய அளவில் மோசடியும் நடந்து வருகிறது. இந்த விஷயத்தில் முதல்வர் ஜெயலலிதா தலையிட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்கிறார்.

என்ன செய்கிறது போலீஸ்?

மதுரையில் டாஸ்மாக்  கடைகளிலும், வைகை ஆற்றங்கரை ஓரத்திலும் தடை செய்யப்பட்ட லாட்டரிச்  சீட்டுகள் விற்பனையாகின. வீடு வீடாகச் சென்று லாட்டரிச் சீட்டு ‘டோர் டெலிவரி’யும் நடந்தது. மதுரை போலீஸ் கமிஷனர் கண்ணப்பன், எஸ்.பி. அஸ்ரா கர்க் ஆகியோரின் நடவடிக்கையால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை மதுரையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் கள்ள லாட்டரிச் சீட்டு விற்பனை களை கட்டிக் கொண்டிருக்கிறது. ‘‘கரூரில் ஒரு நம்பர் லாட்டரி மீண்டும் சிறகு முளைத்து பறக்கத் தொடங்கியிருக்கிறது.  தகவல் தொழில்நுட்பத்தை கள்ள லாட்டரிக்காரர்கள் தங்களுக்குச் சாதகமாக நன்றாகவே பயன்படுத்திக்கொள்கிறார்கள். லாட்டரி குலுக்கல், பரிசு விழுந்த எண்களின் அறிவிப்பு எல்லாமே ‘இன்டர்நெட்டின்’ வாயிலாகவே நடக்கிறது. இதனால் எங்களால் எதையும் எங்கும் ஆதாரபூர்வமாகக் கைப்பற்ற முடிவதில்லை. தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டு  குலுக்கல், சுரண்டல் முறைகளில் பரிசு வழங்குவது, பணச் சுழற்சி மற்றும் பரிசுச் சீட்டு சட்டத்தின்படி குற்றம். இது குறித்து தகவல் அறிவோர், அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவிக்கலாம்’’ என்று நேர்மையான காக்கிகள் சொல்கிறார்கள்.

லாட்டரிச் சீட்டால் பாதிக்கப்பட்ட ஒருவர் கூறும்போது, “லாட்டரி விற்பனை மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுதோறும் வர வேண்டிய பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் தற்போது கள்ள லாட்டரி வியாபாரிகளுக்கு போய்க் கொண்டிருக்கிறது. பள்ளிச் சிறுவர்களைக் குறிவைத்து, பெட்டிக் கடை, ரோட்டோர கடைகளில், ‘லக்கி பிரைஸ்’ என்ற பெயரில், சுரண்டல் பரிசுச் சீட்டுகள் அதிகளவில் விற்கப்படுகின்றன’’ என்கிறார்.

ஆக, அண்ணாவின் ஆசைப்படி, ‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண’ கள்ள லாட்டரியின் கண்களைத் தோண்டினால் மட்டும்தான் சாத்தியம்!

0 கருத்துகள்: