ஈக்வடார் நாட்டின் தூதரகத்தில் தஞ்சம் புகுந்துள்ள, "விக்கி லீக்ஸ்' நிறுவனர் ஜூலியன் அசாஞ்சை சரணடையும்படி, போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.அமெரிக்காவின் ராணுவ ரகசியங்கள் உள்ளிட்ட பல்வேறு ரகசியங்களை, "விக்கி லீக்ஸ்' இணைய தளத்தில் வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்ச். இரண்டு பெண்களை கற்பழித்தது தொடர்பாக, ஸ்வீடன் அரசு, இவர் மீது வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து, அசாஞ்ச், பிரிட்டனில் தஞ்சம்
புகுந்தார். ஸ்வீடன் கோரிக்கைப்படி, இவர் கைது செய்யப்பட்டார். லண்டன் கோர்ட், இவருக்கு ஜாமின் வழங்கியது. இதற்கிடையே, தங்கள் நாட்டிடம் ஒப்படைக்கும்படி ஸ்வீடன் கோரியது.
இதை எதிர்த்து, அசாஞ்ச், மனு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டின் ஏழு நீதிபதிகளில் ஐந்து நீதிபதிகள், அசாஞ்சை, ஸ்வீடனிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டுள்ளனர். இந்த உத்தரவை எதிர்த்து, அசாஞ்ச், மேல் முறையீடு செய்தார். ஆனால், இவரது மனுவை கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது.இதையடுத்து, அசாஞ்சை கைது செய்து, ஸ்வீடனிடம் ஒப்படைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை தவிர்ப்பதற்காக அசாஞ்ச், லண்டனில் உள்ள ஈக்வடார் நாட்டு தூதரகத்தில், கடந்த 20ம் தேதி, தஞ்சம் புகுந்தார்.
தூதரகத்தை விட்டு வெளியேறும்பட்சத்தில், அவர் கைது செய்யப்படுவார். நேற்று வரை, அவரை நாடு கடத்தக்கூடாது என, கோர்ட் தெரிவித்திருந்தது. நேற்றோடு காலக்கெடு முடிந்ததால், அவரை நாடு கடத்த வேண்டிய பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், ஈக்வடார் தூதரக அதிகாரிகளுக்கும், அசாஞ்சுக்கும், சரணடையக் கோரும் நோட்டீசை வினியோகித்துள்ளனர். இதையடுத்து, அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படும் சூழல் உள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக