தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

25.10.11

ஹசாரேவின் `ஊழலுக்கு எதிரான இந்தியா' இயக்கத்தில் ஊழல் குற்றச்சாட்டுக்கள்

எங்களை தூக்கிலிடுங்கள் - கிரண்பெடி ஆவேசம்,`என்னுடைய சேமிப்பை ஏழைகள் நலனுக்காக செலவிடுகிறேன். அதுபோல, அன்னா ஹசாரே குழுவை சேர்ந்த அனைவரும் லோக்பால் மசோதாவுக்காக ஒன்றிணைந்து செயல்படுகிறோம். எங்களுடைய செயல் தவறென்றால் எங்களை தூக்கில் போடலாம்' என கிரண்பெடி தெரிவித்தார்.

ஊழல்வாதிகளை கடுமையாக தண்டிக்க வகை செய்யும் லோக்பால் சட்ட மசோதாவை கொண்டு வருமாறு காந்தியவாதி அன்னா ஹசாரே குழுவினர் போராடி வருகின்றனர். பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் அந்த மசோதாவை நிறைவேற்றாவிட்டால், காங்கிரசுக்கு எதிராக தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்போவதாக அன்னா ஹசாரே அறிவித்துள்ளார். இதைத்

தொடர்ந்து, அன்னா ஹசாரே குழுவை சேர்ந்த ஒவ்வொரு உறுப்பினர்கள் மீதும் அடுத்தடுத்து குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன.

இந்த சூழ்நிலையில், அன்னா ஹசாரே குழுவில் இருந்து வெளியேற்றப்பட்ட சுவாமி அக்னிவேஷ் நேற்று முன்தினம் ஒரு புகார் கூறினார். அதில், `அன்னா ஹசாரே போராட்டத்துக்கு ரூ.80 லட்சம் நிதியுதவி வந்ததாகவும் அதை ஹசாரே குழுவை சேர்ந்த கெஜ்ரிவால், தன்னுடைய சொந்த அறக்கட்டளை கணக்கில் சேர்த்ததாகவும்' கூறினார். மேலும், அந்த அறக்கட்டளையில் அன்னா ஹசாரே குழுவை சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் யாரும் கிடையாது என்றும் தெரிவித்தார்.

அக்னிவேஷ் தெரிவித்த இந்த குற்றச்சாட்டுக்கு ஆதரவாக ரஜிந்திர் சிங் என்பவரும் குரல் கொடுத்துள்ளார். கணக்குகளை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். இதற்கு, அன்னா ஹசாரே குழுவினர் நேற்று பதிலளித்தனர்.

இது குறித்து கெஜ்ரிவால் உதவியாளர் மணிஷ் சிசோடியா கூறுகையில், ``அன்னா ஹசாரேவின் `ஊழலுக்கு எதிரான இந்தியா' இயக்கத்தின் தலைமை செயலகமாக கெஜ்ரிவாலின் அறக்கட்டளை செயல்படுகிறது. அந்த அறக்கட்டளை இணையதளத்திலேயே அனைத்து கணக்கு விபரங்களும் வெளியாகி உள்ளன. மேலும், கடந்த 6 மாதங்களாகவே அன்னா ஹசாரே இயக்கத்தின் கணக்குகள் அனைத்தும் சிறப்பு தணிக்கை செய்யப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாத இறுதியிலும் இணையதளத்தில் அவற்றை வெளியிட்டு வருகிறோம்'' என்றார்.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து அன்னா ஹசாரே குழுவின் முக்கிய உறுப்பினரும் இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியுமான கிரண் பெடி கூறியதாவது:-

அன்னா ஹசாரே குழுவில் உள்ள முக்கிய உறுப்பினர்கள் ஒவ்வொருவர் மீதும் அவதூறு கூறப்படுவது வெளிப்படையாக தெரிகிறது. போராட்டத்தின் ஆரம்ப நாளில் இருந்தே, இதை மிகச் சரியாக செய்து வருகின்றனர். ஊழலுக்கு எதிராக தேசத்தில் எழுச்சியை ஏற்படுத்தவும், வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றவும் அன்னா ஹசாரே குழுவை சேர்ந்த நாங்கள் அனைவரும் எங்கள் வாழ்க்கையையே விலையாக கொடுக்கிறோம்.

சமீபத்தில் எனது மீது புகார் கூறப்பட்டது. இப்போது கெஜ்ரிவால் மீது புகார் கூறப்படுகிறது. இதில் இருந்தே, லோக்பால் விஷயத்தில் மத்திய அரசு எவ்வளவு உணர்வுப்பூர்வமாக இருக்கிறது என்பது தெரிகிறது. மரியாதைக்குரிய மனிதர்கள் அனைவரும் பேசுவதற்கு வெட்கப்பட்டு ஒதுங்கி இருப்பது ஏன்? ஹசாரே இயக்கத்தில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் அனைவரும் ஒன்று பட்டு நிற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

0 கருத்துகள்: