பாகிஸ்தானின் புலனாய்வு பிரிவினரால் மிரட்டப்பட்ட நிலையில் காணாமல் போயிருந்த, பிரபல ஊடகவியலாளர் சியாத் சலீம் சாஷ்சாட் (Syad Saleem Shahzad, 40) கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஏசியா டைம்ஸ் ஆன்லைனிற்காக பணிபுரிந்து வந்த பாகிஸ்தானை சேர்ந்த சியாத் சாலீம் சாஷாட், பாகிஸ்தான் கடற்படையினருக்கும் அல் கைதாவினருக்கும் இடையில் உள்ள
தொடர்பு பற்றி புலனாய்வு கட்டுரை ஒன்றை இறுதியாக எழுதியிருந்தார். இக்கட்டுரை வெளிவந்து இரண்டு நாட்களில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இஸ்லாமாபாத்திலிருந்து 200 கி.மீ தொலைவில் பஞ்சாப் மாகாணத்தில் வாய்க்கால் ஒன்றினுள் இருந்து சடலமாக அவர் மீட்கப்பட்டுள்ளார். அவருடைய சகோதரர் ஹம்சா அமீர் இதை உறுதிப்படுத்தியுள்ளார். சியாத்தின் முகத்தில் வெட்டுக்காயங்கள் காணப்படுகின்றன.
The Times Of India ஊடகத்துக்காக பாகிஸ்தானிலிருந்து தொடர்ச்சியாக பல புலனாய்வு கட்டுரைகளை வெளிவந்த சியாத் சமீபத்தில், "Inside al-Qaeda and the Taliban: Beyond Bin Laden and 9/11" எனும் கட்டுரைத்தொகுப்பையும் வெளியிட்டிருந்தார். மனைவியின்றி, தனது 3 குழந்தைகளையும் தானே வளர்த்து வந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, வீட்டிலிருந்து தொலைக்காட்சி ஸ்டேஷன் ஒன்றுக்கு சென்று கொண்டிருந்த போது காணாமல் போயிருந்தார். இதையடுத்து மனித உரிமை கண்காணிப்பகத்திடம் முறையிடப்பட்டது. பாகிஸ்தானின் புலனாய்வு பிரிவான ISI, அவரை விசாரணைக்காக தடுத்துவைத்திருப்பதாக அவருடைய உறவினர்கள், நண்பர்கள் கருதினர். மேலும் 48 மணி நேரத்தில் அவரை புலனாய்வு பிரிவினர் விடுவித்து விடுவர் எனவும் நம்பினர். இந்நிலையிலேயே அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானின் தேசிய இறையாண்மைக்கு முரணாக, கட்டுரைகள் எழுதிவருவதாக ஐ.எஸ்.ஐ யினால் பலதடவை மிரட்டப்பட்டிருந்த சியாத், ஒருவேளை தனக்கு ஏதும் நடந்தால், ஊடகங்களுக்கு இந்நிலைமையை விளக்கி கூறும் படி கடைசியாக தெரிவித்துள்ளார்.
இதனால் இக்கொலைக்கும் பாகிஸ்தான் அரசு, அல்லது பாகிஸ்தான் இராணுவத்திற்கும் இடையில் தொடர்பிருக்கலாம் என அவரது குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
சியாத் சாலீம் கொல்லப்பட்டதை கண்டித்து பாகிஸ்தான் ஊடகவியலாளர்கள் எதிர்வரும் புதன் கிழமை இஸ்லாமாபாத்தில் ஓர் கண்டன பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக