தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

1.10.12

போலி ஆவணங்களை ஜோடித்து தீவிரவாத வழக்குகளை பதிவுச் செய்யும் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்! – மக்கள் நீதிமன்றம்!


புதுடெல்லி:போலி ஆவணங்களை ஜோடித்து தீவிரவாதம், தேச துரோகம் தொடர்பான வழக்குகளை பதிவுச் செய்யும் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மக்கள் நீதிமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.டெல்லி கான்ஸ்ட்யூசன் க்ளப்பில் வைத்து கடந்த செப்டம்பர் 28,29 தேதிகளில்  ‘ஜோடிக்கப்பட்ட வழக்குகள்
மீதான மக்கள் விசாரணை’ (‘people’s hearing on fabricated cases’) நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட நபர்களின் வாதங்களை கேட்ட பிறகு முன்னாள் நீதிபதி ராஜேந்திர சச்சார், டாக்டர் பினாயக்சென், டாக்டர் ராம் புன்யானி, அஜித் ஸாஹி, ஸபா நக்வி ஆகியோர் அடங்கிய மக்கள் நீதிமன்றம் போலி ஆவணங்களை ஜோடித்து வழக்குகளை பதிவுச் செய்யும் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தது.
மக்கள் நீதிமன்றத்தில் பங்கேற்ற டாக்டர் பினாயக் சென் கூறியது: “நாட்டில் அனைத்து சிறுபான்மையின மக்களும் வேட்டையாடப்படுகின்றார்கள். உலகமயமாக்கல், கார்ப்பரேட் மயமாக்கல் தொடர்பாக இந்தியாவில் ஏராளமான மோதல்கள் நடக்கின்றன. இத்தகைய விவகாரங்களில் சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் தீர்வு காண முயலவேண்டும். ஜனநாயக விழுமியங்களை கைகழுவும் அரசு, மக்களை அவர்களின் வாழ்விடங்களில் இருந்து கூட்டமாக வெளியேற்றி நிலையான வறுமையின் பால் தள்ளிவிடுகிறது. இது தொடர்ந்தால் இனப்படுகொலைக்கு இணையான சம்பவங்கள் அரங்கேறும்.
பிரபல சமூக ஆர்வலரும், எழுத்தாளருமான ராம் புன்யானி கூறியது: “பொய்வழக்குகளை ஜோடிக்கப்பட்டது தொடர்பான ஆதாரங்கள் ஒவ்வொரு தினமும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இத்தகைய பிரச்சனைகளை தீர்க்க தேசிய மனித உரிமை கமிஷன் சிறப்பு டெஸ்கை நிறுவவேண்டும்.  இஸ்லாமிய பயங்கரவாதம்என்ற பிரச்சாரம் வரலாற்றுரீதியான முட்டாள்தனமாகும். ஒரு மத பிரிவினரின் நாகரீகத்தின் மீதான தலையீடாகும்” என்றார் ராம்புன்யானி.
பிரபல பத்திரிகையாளர் அஜித் ஸாஹி கூறியது: “பல காரியங்களில் கருத்து வேறுபாடுகள் நிலவினாலும் அரசுத் துறைகள் பொய்யான வழக்குகளை ஜோடிப்பதில் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டங்களை சீர்குலைக்க மக்களை பீதிவயப்படுத்தும் முயற்சிகளே இவை.” என்று அஜித் ஸாஹி கூறினார்.
தேசத்துரோகம், தீவிரவாதம் தொடர்பான பொய் வழக்குகளை ஜோடிக்கப்படுகின்றன. இதன் பெயரால் போலி என்கவுண்டர்கள் நடந்தேறுகின்றன. குறிப்பிட்ட மதப் பிரிவினரை தீவிரவாதிகளாக சித்தரிக்கின்றனர் என்று மக்கள் நீதிமன்றம் கூறியது.
நிரபராதிகளை கைது செய்யும் போலீசாருக்கு சுதந்திரமாக இயங்கும் வாய்ப்பை அளிக்கும் வகையில் நீதிபீடத்தின் புறத்தில் இருந்து துயரமான நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளன. போலீஸ் மற்றும் அரசின் இத்தகைய தரம் தாழ்ந்த செயல்களை குறித்து பரிசோதித்து, இத்தகைய காரியங்களுக்கான பொறுப்பை அவர்கள் மீது சுமத்தவேண்டும்.
இத்தகைய ஜோடிக்கப்பட்ட வழக்குகளின் விபரங்களை பதிவுச்செய்து ஒன்றாக்க வேண்டும். பொய் வழக்குகளில் சிக்கியவர்களை விடுவிக்க தனிப்பிரிவுகளை ஏற்படுத்தவேண்டும். அவர்கள் விடுதலையாகும் வரை அவ்வழக்குகளை நடத்தவேண்டும். வழக்குகளை உயர்நீதிமன்றங்களுக்கு கொண்டு செல்லவேண்டும். தேசத்துரோகம், தீவிரவாதம் தொடர்பான வழக்குகளை நடத்த தேசிய-மாநில மனித உரிமை கமிஷனின் கீழ் தனியாக பிரிவு ஒன்றை நிறுவவேண்டும். இவ்வழக்குகளை சர்வதேச சிவில் ஃபாரம்களுக்கு கொண்டு செல்லவேண்டும். போர் ஒழுக்கங்கள் தொடர்பான சர்வதேச சட்டங்களை இதில் பிரயோகிக்கலாமா? என்பது குறித்து ஆராயவேண்டும்.
UAPA, POTA  போன்ற தீவிரவாத-தேசத்துரோக குற்றங்களை சுமத்தும் சட்டங்களை வாபஸ் பெறவேண்டும். கலவரத்தில் பாதிக்கப்படும் மக்களுக்கு பாரபட்சமில்லாமல் சிகிட்சை வசதிகள் கிடைப்பதற்கு இந்தியன் ரெட்க்ராஸ், ஐ.சி.ஆர்.சி ஆகியன அமல்படுத்தும் உடன்படிக்கை போன்ற சட்டநடைமுறைகளை மனித உரிமை அமைப்புகள் உருவாக்கவேண்டும். போலி என்கவுண்டர்கள், காணாமல் போகுதல், கஸ்டடி கொலைகள் ஆகியவற்றைக் குறித்த பொறுப்புணர்வு அரசுக்கு ஏற்படவேண்டும் உள்ளிட்ட சிபாரிசுகளை மக்கள் நீதிமன்ற நீதிபதிகள் சிபாரிசுச் செய்தனர். இந்நிகழ்ச்சியை 30க்கும் மேற்பட்ட அமைப்புகள் இணைந்து ஏற்பாடுச் செய்தன.
நன்றி: தூது ஆன்லைன்

0 கருத்துகள்: