தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

17.8.12

ஆச்சரியத்தை ஏற்படுத்திய முர்ஸியின் நடவடிக்கைகள்: இஸ்ரேல் கவலை!


கெய்ரோ:எகிப்தில் ராணுவ தலைவரும், பாதுகாப்பு அமைச்சருமான மார்ஷல் ஹுஸைன் தன்தாவி மற்றும் ராணுவ கவுன்சிலில் 2-வது தலைவரும், சீஃப் ஆஃப் ஸ்டாஃபுமான ஸாமி அனான் உள்ளிட்டோரை அதிரடியாக நீக்கிய முர்ஸியின் நடவடிக்கை எகிப்து மக்களுக்கு இன்ப அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் புரட்சிக்கு பிறகு அதிகார பகிர்வின் போது ஆதிக்கம் செலுத்தி வந்த ராணுவ தலைவர்களை ஒரே நாளில் அனாயசமாக முர்ஸி தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அரசியல் நோக்கர்கள் கூறுவதாக அல் அஹ்ராம் பத்திரிகை கூறுகிறது.
ராணுவ தலைமையை ஓரத்தில் ஒதுக்கிவைக்க ஏற்ற வேளையாக முர்ஸி இதனை பார்க்கவேண்டும் என்று முன்னாள் ஜெனரலும், தூதரக நிபுணருமான காத்ரி ஸஈத் கூறுகிறார். மேலும் அவர் கூறியது:
ராணுவத்தின் செலவில் ஜெனரல்கள் அரசியலில் ஈடுபடுவது கீழ் நிலையில் உள்ள ராணுவ வீரர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் ஸினாயில் 16 ராணுவ வீரர்கள் மர்ம நபர்களால் கொலைச் செய்யப்பட்டதன் மூலம் அவர்களது மனோ வீரியம் தகர்க்கப்பட்டுள்ளது.
ஸினாய் சம்பவத்திற்கு முக்கிய காரணமே ராணுவ ஜெனரல்கள்தாம். தாக்குதல்களில் இருந்து நாட்டைக் காப்பாற்றும்  அடிப்படையான கடமையில்  இருந்து மாறி அவர்கள் அரசியலில் ஈடுபடுகின்றனர். ஜெனரல்கள் வயதானவர்களாகவும், கடுமையான குணமுடையவர்களாகவும் மாறியிருக்கின்றார்கள். புரட்சியும், தொடர்ந்து நடந்த அதிகார மாற்றமும் நீண்டகாலம் பதவிகளில் தொடர அவர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்தியது. ஸினாய் மற்றும் இதர தீவிரவாத அச்சுறுத்தல்களை திறமையான ராணுவத்தைக் கொண்டு தீர்வுகாண முர்ஸி விரும்புகிறார். புதிய பாதுகாப்பு அமைச்சராக ராணுவ உளவுத்துறை தலைவர் அப்துல் ஃபுதூஹ் அல் ஸீஸியை, முர்ஸி நியமிக்க இதுவே காரணம்.
பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு தன்தாவியையும், அனானையும் நீக்க முர்ஸி திட்டமிட்டிருந்தார். ஆனால், ஸினாய் தாக்குதலுக்கு பிறகு உடனடியாக இதனை நடைமுறைப்படுத்தியுள்ளார் என்று ஸயீத் கூறுகிறார்.
முர்ஸியின் நடவடிக்கை, எகிப்திய அரசியலில் ஸ்திரத்தன்மையையும், அமைதியையும் உருவாக்கும் என்று அரசியல் நோக்கரான அல்ஸய்யாத் கருத்து தெரிவித்துள்ளார். முர்ஸி அதிபரானதைத் தொடர்ந்து மக்கள் புரட்சியின் ஆதாயங்களை இஃவானுல் முஸ்லிமீன் பெற்றுக்கொள்ளும். ராணுவத்திற்கும், ஆட்சி தலைமைக்கும் இடையேயான அதிகார போட்டியில் அதிபர் திறமையுடையவராக உள்ளார் என்று ஸய்யாத் கூறியுள்ளார்.
ராணுவ கவுன்சிலின் அரசியல் அதிகாரங்களை ஒழித்துக்கட்டிய அதிபரின் நடவடிக்கை நேரான திசையை நோக்கியது என்று நோபல் பரிசு பெற்ற சீர்திருத்தவாதியான முஹம்மது அல் பராதி கூறுகிறார். ஆனால், லெஜிஸ்லேடிவ் மற்றும் எக்ஸிக்யூடிவின் அதிகாரங்கள் ஒரு தனிநபரை மையமாக கொள்வது ஜனநாயக தத்துவங்களுக்கு எதிரானது. ஆகையால் அதிபரின் நடவடிக்கை தற்காலிகமானதாக அமையவேண்டும் என்று அல்பராதி கூறியுள்ளார்.
முர்ஸியின் நடவடிக்கையை முன்னாள் இஃவான் உறுப்பினரும், அதிபர் பதவிக்கு போட்டியிட்டவருமான அப்துல் முனீம் அப்துல் ஃபுதூஹ் மற்றும் ஸலஃபி கட்சியான அந்நூர் வரவேற்றுள்ளன.
அதேவேளையில் தன்தாவியை பாதுகாப்பு அமைச்சர் பதவியில் இருந்து முர்ஸி நீக்கியது இஸ்ரேலுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எகிப்திய அரசில் புதிய நண்பர்களை கண்டுபிடிக்க இஸ்ரேல் முயற்சிக்க வேண்டும் என்று பிரபல இஸ்ரேலிய பத்திரிகைகள் கருத்து தெரிவித்துள்ளன.

0 கருத்துகள்: