தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.2.11

கைது செய்யப்பட்ட அதிகாரியை விடுவிக்காவிட்டால் தூதரை வெளியேற்றுவோம்: அமெரிக்கா

பாகிஸ்தானில் போலீசாரால் கைது செய்யப்பட்ட அமெரிக்க அதிகாரி ரேமாண்ட் டேவிஸ் (36) உடனடியாக விடுவிக்கப்படாவிட்டால், பாகிஸ்தான் தூதரை வாசிங்டனிலிருந்து வெளியேற்றுவோம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது. இந்த நிலையில், டேவிசை 14 நாள் காவலில் வைக்க பாகிஸ்தான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருப்பதால், இருதரப்பு உறவில் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.
ரேமாண்ட் டேவிஸ் கைது தொடர்பாக அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் ஹுசைன் ஹக்கானியை நேரில் அழைத்துக் கண்டித்த அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் டாம் டோனிலன், "உடனடியாக டேவிசை விடுவிக்காவிட்டால், உங்களை நாட்டை விட்டு வெளியேற்றிவிடுவோம்,  பாகிஸ்தானிலுள்ள தூதரகத்தை உடனடியாக மூடுவோம். உங்கள் அதிபர் சர்தாரியின் வாசிங்டன் பயணத்தை ரத்து செய்வோம்" என்று எச்சரித்ததாக பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்தத் தகவலை அமெரிக்க அதிகாரிகள் யாரும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை. எனினும் இதுபற்றி இஸ்லாமாபாதிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், "தனிப்பட்ட அரசுமுறை பேச்சு பற்றி எதுவும் தெரிவிக்க முடியாது. எனினும் வெளியாகியிருக்கும் தகவல் துல்லியமானது அல்ல" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுபற்றி கேட்டபோது, வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் டாமி வைட்டர், எதுவும் கூற மறுத்துவிட்டார்.
இதனிடையே, அமெரிக்கா எச்சரித்திருப்பதாக வெளியாகியிருக்கும் தகவலை அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் ஹக்கானி மறுத்திருக்கிறார். "அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்ட எந்த அமெரிக்க அதிகாரியும் எனக்கு தனிப்பட்ட வகையில் எந்த எச்சரிக்கையும் விடுக்கவில்லை, வரம்புமீறிப் பேசவும் இல்லை" என டுவிட்டர் இணையதளம் மூலமாக அவர் கூறியிருக்கிறார்.
அமெரிக்காவைச் சேர்ந்த டேவிஸ் கடந்த ஜனவரி 27-ம் தேதி லாகூரில் இருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இதையடுத்து அவரை லாகூர் போலீசார் கைது செய்தனர். லாகூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை பிப்ரவரி 3-ம் தேதி வரையும், பின்னர் பிப்ரவரி 11-ம் தேதி வரையும் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதிக்கப்பட்டது.  தான் காரில் சென்று கொண்டிருந்தபோது, ஆயுதமேந்திய இருவர் தன்னைப் பின் தொடர்ந்து வந்து, கொள்ளையடிக்க முயன்றதாகவும், அதன் பிறகே தற்காப்புக்காக தாம் துப்பாக்கியால் சுட்டதாகவும் போலீசாரிடம் டேவிஸ் தெரிவித்தார். போலீஸ் விசாரணையின்போது தான் ஒரு கன்சல்டன்ட் எனத் தெரிவித்த டேவிஸ், அமெரிக்க வெளியுறவுத் துறை அளித்த ஆவணங்களையும் போலீசாரிடம் காட்டியிருக்கிறார்.
போலீஸ் காவல் முடிந்த நிலையில், போலீசார் அவரை லாகூர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர். விசாரணையின் போது ஆஜரான லாகூர் நகர காவல்துறை ஆணையர் அஸ்லாம் தரீன், டேவிஸ் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், தற்காப்புக்காகச் சுட்டதாக டேவிஸ் கூறுவதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை எனவும் நீதிபதியிடம் தெரிவித்தார். இதையடுத்து, டேவிசை 14 நாள் காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கு வரும் 25-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது லக்பத் சிறையில் டேவிஸ் அடைக்கப்பட்டிருக்கிறார்.
டேவிஸ் விவகாரத்தால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்படக்கூடும் எனக் கருதப்படுகிறது. ஏற்கெனவே, பாகிஸ்தானுடனான உயர்நிலைத் தொடர்புகளை அமெரிக்கா துண்டித்துக் கொண்டிருப்பதாகவும், டேவிஸ் விடுவிக்கப்படும்வரை இதே நிலை தொடரும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், விவகாரம் நீதிமன்றத்துக்குச் சென்றுவிட்டதால் இனி சட்டப்படியே எதுவும் செய்ய முடியும் என பாகிஸ்தான் தலைவர்கள் கூறுவதாகவும் தெரிகிறது

0 கருத்துகள்: