தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

1.3.12

ரேஷன் கார்டைஆன்-லைனில் புதுப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு அரசு உத்தரவு


ரேஷன் கார்டை புதுப்பிக்க மேலும் ஒருமாத காலம் அவகாசம் அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.ரேஷன் கடைக்கு வர இயலாதவர்கள் வீடுகளில் இருந்தபடியே ஆன்-லைனில் புதுப்பிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-  மேலும் ஒருமாதம் கால அவகாசம்

ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலத்தை இந்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதியில் இருந்து வரும் டிசம்பர் 31-ந் தேதி வரை ஓராண்டிற்கு நீட்டிக்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.மேற்படி உத்தரவின்படி புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளில் வருடம் குறிப்பிடாமல் உள்ள கூடுதல் தாளின் மேற்பகுதியில் 2012 என்று முத்திரையிட்டு செல்லத்தக்கதாக அறிவிக்கப்பட்டது.

புதுப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்று வரை அளிக்கப்பட்டது. மொத்தம் உள்ள ஒரு கோடியே 97 லட்சத்து 70 ஆயிரத்து 682 ரேஷன் கார்டுகளில் இதுவரை ஒரு கோடியே 86 லட்சத்து 58 ஆயிரத்து 768 ரேஷன் கார்டுகள் புதுப்பிக்கப்பட்டு உள்ளன. ரேஷன் கார்டை புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. இதனை கனிவுடன் பரிசீலித்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, ரேஷன் கார்டை புதுப்பிக்க மேலும் ஒரு மாத காலத்திற்கு அதாவது மார்ச் 31-ந் தேதி வரை அவகாசம் அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

ஆன்-லைனில் புதுப்பிக்கலாம்

இதன்படி இருப்பிட ஆதாரமாக வழங்கப்பட்டுள்ள வெள்ளை மற்றும் மஞ்சள் நிற தட்கல் ரேஷன் கார்டு வைத்திருப்போர் மற்றும் அரிசி,சர்க்கரை விருப்ப ரேஷன் கார்டுகள் வைத்துள்ள உடல்நல குறைவு காரணமாக நடக்க இயலாதோர், வயது முதிர்வு காரணமாக ரேஷன் கடைக்கு வர இயலாத குடும்ப அட்டைதாரர்கள்,புனிதப்பயணம் மற்றும் மதம் சார்ந்த உள்ளிருப்பு விரதம் மேற்கொண்டுள்ளோர் மற்றும் புதுப்பித்தல் நடைபெற்ற காலத்தில் தற்காலிகமாக வெளிïர் சென்றவர்கள் ஆகியோர் பயனடையும் வகையில் அவர்களது ரேஷன் கார்டுகளை ஆன்-லைன் முறையில் புதுப்பித்துக் கொள்ள இணையதள வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.

இணையதள முகவரி

 அதன்படி  http://210.212.62.90:8080/newfcp/cardvalidity.do  என்ற இணையதள முகவரிக்கு சென்று புதுப்பித்து கொள்ளலாம்.இதில் ரேஷன் பொருள் வேண்டுவோர் 2012-ம் ஆண்டிற்கான கால நீட்டிப்பு தாளின் இரண்டு நகல்களை எடுத்துக்கொண்டு ஒரு நகலை குடும்ப அட்டையில் ஒட்டிக் கொண்டும்,மற்றொரு நகலை உரிய கடைக்காரரிடம் அளித்து ரேஷன் பொருட்களை தொடர்ந்து பெற்றுக் கொள்ளலாம்.

 ரேஷன் பொருள் வேண்டாதவர்கள் மற்றும் இருப்பிட சான்றாக மட்டுமே வைத்துக் கொண்டுள்ளவர்கள் இணையதளத்தில் உள்ள 2012-ம் ஆண்டுக்கான கால நீட்டிப்பு தாளின் ஒரு நகலை அவர்களுடைய குடும்ப அட்டையில் ஒட்டிக் கொண்டால் மட்டும் போதுமானது.

இந்த வசதி 31-ந் தேதி வரை மட்டுமே இந்த இணையதள வசதி நாளை (மார்ச் 1) முதல் 31-ந் தேதி வரையில் நடைமுறையில் இருக்கும்.மேற்படி இந்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்: