தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

30.8.11

எனது தந்தையை காப்பாற்ற தமிழ்நாட்டுக்கு வந்து போராட விரும்புகிறேன்


முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனு நிராகரிக்கப்பட்டுவிட்டது. இதனால் அவர்களுக்கு வரும் 9-ந்தேதி வேலூர் ஜெயிலில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
 
ராஜீவ்காந்தி கொலையாளிகள் 3 பேரின் தூக்கு தண்டனையை நிறுத்தக்கோரி தமிழகம் முழுவதும் சட்டக்கல்லூரி மாணவர்கள் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தண்டனையை எதிர்த்து கோர்ட்டில் மேல்முறையீடு செய்யவும் அவர்கள் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.  
 
ராஜீவ் கொலை வழக்கு கைதிகளான முருகன்-நளினி தம்பதியினர் மகள் அரித்ரா. தற்போது 20 வயதான அரித்ரா லண்டனில் வசித்து வருகிறார். அவர் அளித்துள்ள உருக்கமான பேட்டியில் கூறியிருப்பதாவது:-
 
நான் பிறந்தது முதலே பல்வேறு சிரமத்தை சந்தித்து வளர்ந்து வந்துள்ளேன். ஆரம்பத்தில் பெற்றோரை பிரிந்து பாட்டியின் பராமரிப்பில் வாழ்ந்தேன். பெற்றோரை பிரிந்து வாழ்ந்து வரும் நான் 12 வயதாக இருந்த போதுதான் கடைசியாக அவர்களை பார்த்தேன். அதன் பிறகு என்னால் அவர்களை சந்திக்க முடியவில்லை. 
 
பெற்றோரை பார்க்க முடியவில்லை. அவர்களுடன் இருக்க முடியவில்லை. அவர்களை நான் சந்திக்க முடியாத நிலையில் உள்ளேன்.கூட இருந்து வாழக்கொடுத்து வைக்கவில்லையே என்று கவலையாக இருக்கிறது. இத்தனை நாட்களாக அவர்கள் சிறையில் இருக்கிறார்கள் என்ற நிம்மதியில் இருந்து வந்தேன். இப்போது அதையும் கூட பறிக்க பார்க்கிறார்களே.
 
இது கொஞ்சமும் நியாயமில்லை. இதைவிட ஒருவருக்கு கொடுமையான விஷயம் எதுவும் இல்லை. யாருக்கும் இப்படி ஒரு நிலைவரக்கூடாது என்று கடவுளை வேண்டுகிறேன். வேறு என்ன சொல்வது என்ற எனக்கு தெரியவில்லை.   எனது தந்தையை தூக்கில் போடப்போகிறார்கள் என்ற செய்தி வந்தது முதல் நான் தூக்கமின்றி தவித்து வருகிறேன்.
 
முதல்-அமைச்சர் ஜெயலலிதா எனது தந்தையை காப்பாற்ற நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும். இந்தியா வர நான் விசா கோரி விண்ணப்பித்து உள்ளேன். எனது தந்தையைக் காப்பாற்றக்கோரி அங்கு பலர் போராடி வருகின்றனர். அவர்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்த நானும் விரும்புகிறேன்.
 
இவ்வாறு அவர் கூறினார்.

0 கருத்துகள்: