தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

27.6.11

திமுகவுக்கு எதிராக கடுமையாக வீசிய மக்கள் அலையால் தோற்றோம்- அன்புமணி


திமுக ஆட்சிக்கு எதிராக மக்கள் மத்தியில் வீசிய கடுமையான எதிர்ப்பு மற்றும் அதிருப்தி அலையால்தான் பாமக தோல்வி அடைய நேரிட்டது. திமுகவுக்கு எதிரான அலையில் பாமக சிக்கிக் கொண்டது என்பதே உண்மை என்று கூறியுள்ளார் பாமக இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்.
பாமகவின் மக்கள் டிவிக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் திமுகவை கடுமையாக சாடியுள்ளார்.

அன்புமணி அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:
மாற்றத்தை விரும்பிய மக்கள்
பொதுவாக மக்கள் மாற்றம் வர வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். அதனால் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளனர். 30 ஆண்டு காலமாக மாறிமாறிதான் அரசுகள் வந்து கொண்டிருக்கின்றன.
கேரளத்தில் 50 ஆண்டுகளாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றம் நடந்துகொண்டிருக்கிறது. அதுபோலத்தான் இந்தத் தேர்தலிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதுக்கும் மேலாக பல காரணங்கள் உள்ளன.
விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மின் பற்றாக்குறை, 2ஜி அலைக்கற்றை என்று பல்வேறு காரணங்கள் உள்ளன.
2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தோல்விக்குக் காரணம்
2ஜி அலைக்கற்றை பிரச்னையை திமுக அமைச்சர்களே சொல்லுகிறார்கள். அதுதான் என் எண்ணமும். இப்படிப்பட்ட காரணத்தால்தான் மக்கள் ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று இந்தத் தேர்தலில் வாக்களித்துள்ளனர்.
2006 தேர்தலில் எந்த அலையும் வீசவில்லை. அது நடுநிலையான தேர்தல். இந்தத் தேர்தலைப் பொருத்தவரை பாமகவுக்கு எதிரான வாக்குகள் கிடையாது. திமுகவுக்கு எதிரான வாக்குகள்தான். அதற்கும் மேலாக சொல்லப்போனால் அதிமுகவுக்குச் சாதகமான வாக்குகளும் கிடையாது. ஆளும் கட்சிக்கு (திமுக) எதிரான வாக்குகள்தான்.
எங்களுக்குத் தோல்வி அல்ல, சரிவுதான்
இந்தத் தேர்தலில் எங்கள் கூட்டணிக்கு தோல்வி என்று சொல்ல முடியாது சரிவு என்றுதான் சொல்ல வேண்டும். வெற்றிபெற்ற அதிமுக கூட்டணி பெற்ற வாக்குகள் ஒரு கோடியே 90 லட்சம். தோற்ற திமுக கூட்டணி பெற்ற வாக்குகள் ஒரு கோடியே 45 லட்சம். வெறும் 45 லட்சம் வாக்குகள்தான் அதிமுக கூட்டணி அதிகம் பெற்றிருக்கிறது. இதனால் இதைத் தோல்வி என்று சொல்ல முடியாது. சரிவு என்றுதான் சொல்ல வேண்டும்.
அதேசமயம் இந்தத் தோல்வியை ஏற்றுக் கொள்கிறோம். இது எங்களுக்கு எதிரான வாக்குகள் கிடையாது. ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள். அந்த அலையில் நாங்கள் சிக்கிக் கொண்டோம்.
2006 சட்டப்பேரவை தேர்தலில் 31 தொகுதிகளில் போட்டியிட்டு 18 லட்சத்து 50 ஆயிரம் வாக்குகள் பெற்றிருந்தோம். இப்போது 19 லட்சத்து 30 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளோம். 80 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகவே பெற்றுள்ளோம்.
2006 தேர்தலில் எந்த அலையும் இல்லாததால் 55 ஆயிரம் வாக்குகள் பெற்றிருந்தாலே வெற்றிபெற முடிந்தது. 2011 – தேர்தலில் 75 ஆயிரம் வாக்குகள் பெற்றும் ஜெயிக்க முடியவில்லை. இதற்குக் காரணம் நடுநிலையாளர்கள் அதிக அளவில் வாக்களித்ததுதான். ஒவ்வொரு தொகுதியிலும் 30 ஆயிரத்திலிருந்து 40 ஆயிரம் வரை கூடுதல் வாக்குகள் பதிவாகி உள்ளன.
தேமுதிகவால் அதிமுக வெல்லவில்லை
2006 தேர்தலில் அதிமுக வெற்றிபெற முடியாததற்கு தேமுதிக தனியாக நின்றதுதான் காரணம் என்கிறார்கள். இந்தத் தேர்தலில் தொகுதி வாரியாக பார்த்தால் அதிமுக 54 சதவீதமும், அதில் அங்கம் வகித்த புதிய தமிழகம் 54 சதவீதமும், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் 50, 51 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளன.
அந்தக் கூட்டணியில் தேமுதிகதான் குறைவாக 44 சதவீத வாக்குகள் பெற்றுள்ளது. அதிமுகவைவிட தேமுதிக 10 சதவீத வாக்குகள் குறைவாகப் பெற்றிருப்பதன் மூலமே அதிமுக வெற்றிக்கு தேமுதிக காரணம் இல்லை என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
மக்களுக்காக உழைக்க வேண்டும்
மக்களின் எண்ணத்தைக் குறைவாக எடைபோடக் கூடாது. ஏதோ பேசி, காசு கொடுத்து, சினிமாவில் நடித்து ஓட்டு வாங்கிவிடலாம் என்று நினைக்கக்கூடாது. உண்மையாக மக்களுக்காக உழைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். எனினும் மக்கள் தீர்ப்பை முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்: