
புதுடெல்லி:முன்னாள் மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாட்ஷாவின் மரணம் குறித்து சி.பி.ஐ விசாரிக்க மத்திய அரசு 3 தினங்களுக்குள் அறிவிக்கை வெளியிட வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாதிக் பாட்ஷாவின் மரணம் குறித்து விசாரணைக்கான பொறுப்பை சி.பி.ஐயிடம் ஒப்படைப்பதுக் குறித்து மத்திய அரசு காலதாமதம் செய்துவந்த சூழலில் உடனடியாக அறிவிக்கை வெளியிட வலியுறுத்தியதாக நீதிபதிகளான
ஜி.எஸ்.சிங்வி, எ.கெ.கங்கூலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தெரிவித்துள்ளது.சாதிக் பாட்ஷாவின் வழக்கு விசாரணையை சி.பி.ஐயிடம் ஒப்படைக்க தமிழக அரசு சார்பாக ஆஜரான கூடுதல் சோலிசிட்டர் ஜெனரல் இந்திரா ஜெய்சிங்கின் கோரிக்கையை பதிவுச்செய்த பிறகுதான் உச்சநீதிமன்றம் அறிவிக்கை வெளியிட உத்தரவிட்டது.
சாதிக் பாட்ஷாவின் மரணம் குறித்த விசாரணையை சி.பி.ஐயிடம் ஒப்படைக்கக்கோரி கடந்த மாதம் 18-ஆம் தேதி தமிழக அரசு கடிதம் எழுதியபோதும்,மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் செய்துவருகிறது.எனவே இது தொடர்பாக அறிவிக்கை வெளியிட மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டுமென பொது நலன் வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கை சி.பி.ஐ.எல் என்ற அரசு சாரா அமைப்பின் சார்பாக பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை பரிசீலித்த உச்சநீதிமன்ற பெஞ்ச் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்தது.
சி.பி.ஐ.எல் முன்னர் அளித்த மனுவை பரிசீலித்த உச்சநீதிமன்றம் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிட்டது. இவ்வழக்கில் கடந்த சனிக்கிழமை சி.பி.ஐ குற்றப்பத்திரிகையை சமர்ப்பித்தது. 2ஜி ஸ்பெக்ட்ரம் மோசடியிலிருந்து கிடைத்த பணத்தை பாட்ஷாவின் நிறுவனம் மூலமாக கலைஞர் டி.விக்கு அளிக்கப்பட்டதாக சி.பி.ஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் சுட்டிக் காட்டியிருந்தது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக