தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

14.10.10

நீதிக்கான போராட்டத்தை தொடரும் ரேச்சல் கொரியின் பெற்றோர்

ஜெருசலம்,அக்.13:ஃபலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் கட்டவிழ்த்துவிடும் அக்கிரமங்களுக்கெதிராக போராடி உயிரைத் தியாகம் செய்த அமெரிக்க மனித உரிமைப் போராளி ரேச்சல் கொரியின் பெற்றோர் நீதிக்கான போராட்டத்தை அவர் மரணித்து ஏழு ஆண்டுகள் கழிந்த பிறகு தொடர்கின்றனர்.

கொரியின் மரணத்திற்கு காரணமானவர்களை சட்டத்தின் முன்னால் நிறுத்துவதோ, விசாரணை செய்வதோ சாத்தியமாகாவிட்டாலும் கூட அந்த குற்றவாளிகளின் முகத்தை ஒருமுறையாவது காண இயலுமா என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கடந்த 2003 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 -ஆம் தேதி ஃபலஸ்தீனில் ஒருவருடைய வீட்டை இடிக்க முயன்ற இஸ்ரேலிய ராணுவத்தினரை தடுப்பதற்கு முயன்ற பொழுது புல்டோஸர் ஏற்றப்பட்டு கொல்லப்பட்டார் ரேச்சல் கொரி.

கொரியின் கொலையின் மூலம் இஸ்ரேல் எவ்வளவுதூரம் மனிதத் தன்மையற்று ஃபலஸ்தீனர்களுடன் நடந்துக் கொள்கிறது என்பதை மனிதநேய ஆர்வலர்கள் உலக சமூகத்தின் முன்னால் எடுத்துரைத்தனர்.

கொரியின் பெற்றோர்கள் நீதிமன்றத்தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கோரியிருப்பது இரண்டு விஷயங்களாகும்.
1.ரேச்சல் கொரியின் மரணத்திற்கு காரணமான குற்றவாளிகளை நேரில் சந்திக்க அனுமதிக்க வேண்டும்
2.இச்சம்பவத்தில் ராணுவம் மன்னிப்புக் கோருவதுடன், வழக்கு தொடர்பாக செலவழித்த பணத்தை தரவேண்டும் என்பதாகும்.

ஆனால், கொரியின் பெற்றோர்கள் தாக்கல் செய்துள்ள சிவில் வழக்கில் விசாரணை நடைபெறும் பொழுது புல்டோஸரின் ஓட்டுநரையும், அச்சம்பவத்திற்கு தலைமை வகித்த ராணுவ கமாண்டரையும் வெளியில் காண்பிக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கெதிராக கொரியின் பெற்றோர் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளனர். இவ்வழக்கை நடத்துவதற்கு இதுவரை தங்களுக்கு ஒரு லட்சம் டாலர் செலவானதாக கொரியின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவத்தை விசாரணைச் செய்த அதிகாரிகள் கொரியின் மரணம் விபத்து என பதிவுச் செய்துள்ளனர். மேலும் இந்த அக்கிரமச் செயலில் ஈடுபட்ட புல்டோஸர் ஓட்டுநரையும், ராணுவ அதிகாரியையும் குற்றமற்றவர்கள் எனக் கூறுகிறது விசாரணை அறிக்கை.

புல்டோஸரின் ஓட்டுநர் புகைப்படலத்தின் காரணமாக கொரி நிற்பதை கவனிக்காமல் புல்டோஸரை ஓட்டியதாக அவ்வறிக்கையில் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நஷ்ட ஈட்டைக்கோரி கொரியின் பெற்றோர்கள் வழக்கு தாக்கல் செய்தனர்.

ஃபலஸ்தீன் மக்களின் துயரங்களைக் குறித்து ஒன்றுமே தெரியாமலிருந்த ரேச்சல் கொரியின் பெற்றோர் தற்பொழுது ஃபலஸ்தீனர்களுக்காக உலகை சுற்றி வருகின்றனர்.

கொரியின் தாயார் சின்டி கொரி, ரேச்சல் கொரியின் மரணத்திற்கு முன்பு ஒரு முறை கூட வெளிநாட்டிற்கு சென்றதில்லை. தந்தை க்ரைக கொரியோ வியட்நாம் போரில் அமெரிக்காவிற்கு உதவுவதற்காக நாட்டை விட்டு வெளியேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: