தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

25.6.11

தமிழீழ போராட்டமும் இலங்கை முஸ்லிம்களும் ஒரு பார்வை!


கொழும்பின் தென்புற நகரான தெஹிவளை, முஸ்லிம்கள் அதிகம் வாழும் ஒரு பகுதி. கல்கிஸை தெஹிவளை மாநகர சபையில் முஸ்லிம் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படும் அளவிற்கு அதிக முஸ்லிம்கள் வாழும் ஒரு பகுதி.

தெஹிவளை 5 ஜீம்மா பள்ளிவாசல்கள் 8 சாதாரண பள்ளிவாசல்களை கொண்டது. அந்த அளவுக்கு அங்கு முஸ்லிம்கள் பெருமளவில் வாழ்ந்து வருகிறார்கள்.

இலங்கை அரசியல் பொளத்த மயமாக்கப்பட்டு
வருகிறது. பொளத்த மதம் அமைதியை விட்டு ஆயுதமயப்படுத்தப்பட்டுவருகிறது,

புத்தர் உயிர் வதை கூடாது என்று அகிம்சை போதித்தவர், அவர் பெயரை சொல்லி மனித வேட்டை ஆடப்படும் பூமியாக இலங்கை மாற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தெஹிவலை பாத்தியா மாவத்தை மஸ்ஜிதை பொளத்த துறவிகள் முற்றுகையிட்டு, தடைசெய்ய முற்பட்டுள்ளனர்.  இவர்களுக்கு பயந்து முஸ்லிம்களும் அந்த பள்ளிவாசலை மூடிவிட்டார்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இதில் ஒன்றை நம் கவனிக்க வேண்டியது உள்ளது அது " ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்" என்பதே. ஆரம்பம் முதல் தமிழ் மக்களுக்கு இடையில் உள்ள ஒற்றுமையின்மை இப்பொது சிங்கள காடையர்களுக்கு ஒரு ஆயுதமாக மாறிவிட்டது.

தெஹிவளை விவகாரம் வெறுமனே அப்பகுதி முஸ்லிம்களின் பிரச்சனையல்ல. இலங்கை வாழ் ஒட்டு மொத்த முஸ்லிம்களின் உரிமை தொடர்பான பிரச்சனை.

தமிழீழ விடுதலைபுலிகள் அமைப்பு இந்த போராட்டத்தை ஆரம்பிக்கும் போது அதில் முஸ்லிம்களையும் இணைத்து கொள்ளாதது ஒரு பெரும் தவறான விடயமே. இதனாலேயே தமிழீழ போராட்டம் தோல்வியை நோக்கி நகர்ந்தது.

புலிகள் ஆரம்பத்தில் பயிற்சிகள் கற்று கொண்டது பாலஸ்தீன விடுதலை இயக்கத்திடமே! இப்படி யாசர் அரபாதிடம் கொரில்லா பயிற்சி உக்திகளை கற்றவர்கள், ஏனோ இந்த போராட்டத்தில் முஸ்லிம் சமூகத்தை ஒருங்கிணைக்கும் வித்தையை மறந்தார்கள்.

முஸ்லிம்களை வெறும் நிதி வசூல் செய்யும் ஒரு இயந்திரமாகவே பயன்படுத்தினார்களே அல்லாமல் 'அவர்களை அந்த போராட்டத்தில் இணைத்து கொண்டு முன்னேறும்' ஒரு வழியை புலிகள் தவறவிட்டார்கள்.

அதுமட்டுமல்லாது பிற்காலத்தில் பள்ளியில் தொழுகை நடத்தி கொண்டிருந்த நூற்றுக்கும் அதிகமான முஸ்லிம்களை கொன்று குவித்தது, மூதூர் வெளியேற்றம் இப்படி புலிகள் முஸ்லிம்களின் வெறுப்பை பரிபூரணமாக சம்பாதித்து ஈழத்தமிழர் போராட்டம் என்பது முஸ்லிம் சமூகம் இல்லாத ஒரு போராட்டமாக வடிவமைக்கப்பட்டது.

இதன்காரணமாக இவர்கள் போராட்டம் ஒரு வீரியம் பெற்றிருக்கவில்லை என்பதோடு, உலகின் ஒரு பெரும் சமூகத்தின் ஆதரவை, இலங்கையின் மூன்றாவது பெரும் மக்கள் சக்தியாக திகழும் முஸ்லிம் சமூகத்தின் ஆதரவை பெற தவறியது அவர்களின் பேராட்டத்தை தோல்வியை நோக்கி தள்ளியது.

இது விசயத்தில் முஸ்லிம்களையும் நம்மால் குறை சொல்ல முடியும். அவர்களும் ஈழத்தமிழர் போராட்டத்தில் தங்களை தாமாகவே   இணைத்து கொண்டிருக்க வேண்டும். அவர்கள் அது விசயத்தில் ஏற்படுத்திய வெற்றிடம் 'இப்போது ஈழத்தமிழர் போராட்டம் ஒடுக்கப்பட்டு விட்ட கையோடு' சிங்கள இனவாத காலிகளின் கவனம் முஸ்லிம்கள் பக்கம் திரும்பி விட்டது. 

ஈழத்து  போராட்டத்தில் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து போராடி இருந்தால் இப்போது தனி தமிழீழம் அமைந்திருக்கும். உலக அளவில் அதற்க்கு ஆதரவும் இருந்திருக்கும். இப்போது சிங்களவர்களின் கண்கள் முஸ்லிம்கள் தொழில் வளங்களை கண்டு பொறாமை கொண்டுள்ளது. முஸ்லிம்களின் பொருளாதாரத்தை கைப்பற்றுவது அவர்களை இரண்டாம் தர சமூகமாக மாற்றுவது இதுவே அவர்கள் திட்டம்.

இனி பழையதை பேசி காரியம் இல்லை! இப்போதாவது இவர்கள் இணைந்து செயல்படுவார்களா? அப்படி செயல்படுவார்கள் என்றால் வெற்றி நிச்சயம். இலங்கை மற்றும் இந்திய முஸ்லிம்கள் இன்னும் பள்ளிவாசலில் புலிகள் நடத்திய தாக்குதலையும், மூதூர் வெளியேற்றத்தையும்,சில லங்கா ஸ்ரீ இணையதளங்கள் முஸ்லிம்களை, அவர்களின் போராட்டங்களையும் தீவிரவாதம் என்று எழுதி வருவதையும் பற்றி பேசி வேறுபட்டு நிற்க வேண்டாம்.

மறப்போம் மண்ணிப்போம் என்று எண்ணி தமிழீழ போராட்டம் என்பது மதங்களை கடந்து தமிழர் என்ற ஒற்றுமை உணர்வோடு ஒரே தளத்தில் இருந்து செயல்பட்டாலே வெற்றி பெற முடியும் என்பதை இங்கே பதிவு செய்கிறேன். நன்றி : சிந்திக்கவும்

0 கருத்துகள்: