தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

8.4.11

லிபியா மீது விமான தாக்குதலை நிறுத்துங்கள் ஒபாமாவுக்கு கடாபி கடிதம்


திரிபோலி, ஏப். 7- லிபியா நாட்டில் அதிபர் கடாபி பதவி விலக கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களை ஒடுக்க கடாபி ராணுவத்தை ஏவி விட்டுள்ளார். ராணுவம் பொது மக்கள் மீது கண் மூடித்தனமாக தாக்குதல் நடத்தியது. இதில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து அமெரிக்கா, பிரான்சு, இங்கிலாந்து ஆகிய நாடுகள் லிபியா மீது தாக்குதல் நடத்தின. விமானங்கள் மூலம் குண்டு வீசின. ஆனாலும் கடாபி தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது
தாக்குதல் நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடாபி அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். 3 பக்கங்கள் கொண்ட அந்த கடிதத்தில் கடாபி கூறி இருப்பதாவது:-

எங்கள் நாடு வளர்ந்து கொண்டிருக்கும் சிறிய நாடு. இதன் மீது நீங்கள் போர் தொடுத்து இருப்பது நியாயமற்றது. எனவே எங்கள் மீதான போரை உடனே நிறுத்துங்கள். நீங்கள் ஒரு சிறந்த மனிதர். நீங்கள் இப்படி ஒரு தவறான செயலில் ஈடுபடக்கூடாது. உங்களுக்கு என்று முக்கிய பொறுப்புகள் உள்ளன. அதில் இருந்து மாறக்கூடாது. நீங்கள் உலக அமைதிக்கு பாடுபடுகிறீர்கள். எங்களுடனும் நட்பாக இருங்கள்.

தீவிரவாதிகளை ஒடுக்க ஒத்துழைப்பு கொடுங்கள். உங்கள் படைகள் தாக்குதல்களால் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறோம். ஜனநாயக சமுதாயத்தின் மீது விமான தாக்குதலையும், ஏவுகணை தாக்குதலையும் நடத்துவது சரியானது அல்ல. எங்களுக்கு எதிரான படையில் அல்கொய்தா தீவிரவாதிகள் இடம் பெற்று இருக்கிறார்கள் என்பதை நீங்கள் உணரவேண்டும்.

உங்களை எனது மகன் போல கருதுகிறேன். நீங்கள் அமெரிக்காவின் பெயரில் எங்கள் நாட்டு விஷயத்தில் தலையிட்டு இருக்கிறீர்கள். லிபியா விஷயத்தை லிபியா மக்களிடமே விட்டு விடுங்கள். ரீகன் அமெரிக்க அதிபராக இருந்தபோதும் எங்கள் மீது தாக்குதல் நடந்தது. இப்போது மீண்டும் தாக்குகிறீர்கள். நாங்கள் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறோம். இதை மேலும் தொடர்வது சரி அல்ல. நீங்கள் என்ன செய்தாலும் நான் உங்களை எனது மகனாகவே கருதுகிறேன். அடுத்து வரும் தேர்தலிலும் நீங்கள் வெற்றி பெற்று மீண்டும் அதிபராக வரவேண்டும் என வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கடிதத்தில் கூறி உள்ளார்.

1 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பாளர்கள் இந்த உலகத்தினை மீண்டும் மறுபங்கீடு செய்யும் புதிய அணுகுமுறையாகவே லிபியா மீது தாக்குதல் தொடங்கியிருக்கிறார்கள் . ஆனால் இந்த முயற்சியும் தோல்வியில்தான் முடியும்

Nalliah Thayabharan.