
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்கரையில் மர்ம ஏவுகணை பறந்தது பற்றி அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில், கலிபோர்னியா கடல்பகுதி உள்ளது இங்கு வானில் ஏவுகணை ஒன்று பறந்ததினால் ஏற்பட்ட புகை தடத்தை ஹெலிகாப்டரில் சென்ற பத்திரிக்கையாளர்கள், தங்கள் கேமராவில் பதிவு செய்து பென்டகன் அதிகாரிகளிடம் கொடுத்துள்ளனர். இது குறித்து அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்க கடல் பகுதியில் எந்த வித ராணுவ பயிற்சியும் நடைபெறாத நிலையிலும். தனியார் ஆயுத நிறுவனங்கள் தாங்கள் நடத்தப்போகும் ஏவுகணை சோதனை பற்றி, முன்கூட்டியே தகவல் தெரிவிக்காத நிலையிலும் அங்கு ஏவுகணை பறந்திருப்பது ஆச்சர்யமாக உள்ளது. வெளிநாட்டு போர் கப்பல்கள், அமெரிக்கா அருகே போர் பயிற்சி மேற்கொள்வதற்கான வாய்ப்பும் இல்லை என பென்டகன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எங்கிருந்து ஏவுகணை வீசப்பட்டது என்பது குறித்து விசாரணை நடக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க ராணுவத்தின் மாஜி துணை அமைச்சர் ராபர்ட் எல்ஸ்வொர்த், ஒரு வேளை நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து இந்த ஏவுகணை வீசப்பட்டிருக்கலாம் என்றார்.