சாராயக் கடைக்குள் அமர்ந்து கொண்டு சர்பத்'துதான் குடித்தேன் என்று சொன்னாலும் அது பார்ப்பவர்களுக்கு சாராயமாகவே தோன்றும். அதனால் அத்தகையோரை மக்கள் வெறுத்து ஒதுங்குவது இயல்பானதுதான். அதைப் போல் மதவாத பாஜகவோடு உறவு வைத்துக்கொண்டு மதச்சார்பின்மை பேசினால் அது மக்களால் புறக்கணிக்கப்படும். உ.பி. யின் முன்னாள் முதல்வரும், மதவாத பாஜகவின் தளபதியும், பாபர் மஸ்ஜித் இடிப்பின் சூத்ரதாரியுமான கல்யான்சிங்குடன் ஒரு தேர்தலில் கரம் கோர்த்து மண்ணைக்கவ்விய பின் மண்ணில் புரண்டு புலம்பினார் முலாயம் சிங் யாதவ்.
தெலுங்கு தேசம் கட்சியின் மூன்று நாள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, ''தேசிய ஜனநாயக கூட்டணியில் நான் அங்கம் வகித்தது மிகப்பெரிய தவறு என, தற்போது உணர்கிறேன். பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் நான் இருந்ததால், முஸ்லிம்கள் என்னை விட்டு விலகிச் சென்றுவிட்டனர்.
குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்கு பிறகு நடந்த கலவரத்துக்கு பொறுப்பு ஏற்று பதவி விலகும்படி முதல்வர் நரேந்திர மோடியை வற்புறுத்தினோம். ஆனால், அவர் பதவி விலகவில்லை. இதனால், முஸ்லிம்களின் கோபத்துக்கு நாம் ஆளாக நேர்ந்தது. இனி எதிர்காலத்தில் இது போன்ற தவறை செய்ய மாட்டோம். மைனாரிட்டிகளின் நன்மைக்காக பாடுபடுவோம். விவசாயத் துறையிலும் சில தவறுகளை செய்துவிட்டோம். இதெல்லாம் நமது தோல்விக்கு காரணமாக அமைந்து விட்டன என்று பேசியுள்ளார்.
அதே போல் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒரு காலத்தில் அங்கம் வகித்து பாராளுமன்ற சபாநாயகர் பதவிவரை அனுபவித்து பின்பு கூட்டணியிலிருந்து கழன்ற தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, ""பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்துக் கொண்டது நான் செய்த மிகப்பெரிய தவறு. இதனால், முஸ்லிம்களின் கோபத்துக்கு ஆளாக நேர்ந்துவிட்டது என்று புலம்புகிறார்.
மதவாத பாஜகவுக்கு பால் வார்த்த முலாயம் சிங் மற்றும் சந்திரபாபு நாயுடு போன்றவர்களுக்கு பட்டபின் தான் தெரிகிறது போலும். தமிழகத்தில் ஒரு காலத்தில் பாஜகவை தாங்கிப்பிடித்த ஜெயலலிதா, கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி வைக்க தானாக முன் வந்தபோது சட்டை செய்யாமல் விட்டதால்தான் சிறுபான்மை மற்றும் மனிதநேய மக்களின் வாக்குகளை அவரால் பெறமுடிந்தது. ஜெயலலிதாவின் இந்த அரசியல் வியூகத்தை இனியாவது பாஜகவோடு கரம் கோர்க்க நினைப்பவர்கள் பின்பற்றட்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக